ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் சென்னை அழைத்து வந்த அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை நீலாங்கரையை அடுத்த அக்கரை பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக சீசிங் ராஜா கூறியதாக தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் இன்று அவரை போலீஸ் பாதுகாப்புடன் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது திடீரென அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சீசிங் ராஜா சுட்டதாகவும் அதனால் தற்காப்புக்காக வேளச்சேரி இன்ஸ்பெக்டர் விமல் அவரை நோக்கி சுட்டுள்ளார்.
இதில், மார்பு மற்றும் வயிறு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்த சீசிங் ராஜாவை போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் என்கவுண்டர் குறித்து சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “இவர் மீது ஆறு கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 39 வழக்குகள் உள்ளன. இவர் எந்த வாரண்ட்டுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை. இவர் மீது 10 வாரண்ட் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.
எங்களுடைய விசாரணையில் இவருக்கும் ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.
வேளச்சேரி வழக்கு ஒன்றில் தேடிய போது தான் அவரை இங்கு பிடித்து வந்தோம்” என்றார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தனிப்படை போலீசார் இவரை பிடித்தார்களா அல்லது வேளச்சேரி போலீசார் பிடித்தார்களா என்ற கேள்விக்கு, “அந்த டீம் வேறொரு வழக்குக்காக ஆந்திரா சென்றிருந்தது.. அப்போது, இங்கிருந்து வேளச்சேரி இன்ஸ்பெக்டரை அனுப்ப முடியாது என்பதால், தகவல்களை அனுப்பி சரி பார்க்க சொன்னோம். அப்படி செய்த போது சீசிங் ராஜா அங்கு பதுங்கி இருந்தது தெரிய வந்தது” என்று தெரிவித்தார்.
எந்த வழக்குக்காக கைது செய்தீர்கள் என்ற கேள்விக்கு, “துப்பாக்கியை காட்டி மிரட்டி ஒருவரிடம் பணம் பறித்து சென்றதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தான் கைது செய்யப்பட்டார்” என்றார்.
சீசிங் ராஜா மனைவி திட்டமிட்டு அவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள் என்று நேற்றே வீடியோ வெளியிட்டு இருக்கிறாரே என்ற கேள்விக்கு, “இது ட்ரெண்ட் ஆகிவிட்டது. யாரை கைது செய்தாலும் அவரது குடும்பத்தினரை வைத்து வீடியோ போடுவது வழக்கமாகிவிட்டது” என குறிப்பிட்டார்.
“ரவுடிகளுக்கு துப்பாக்கிகள் எப்படி வருகிறது என்பதெல்லாம் விசாரித்தால் தான் தெரியவரும். எங்களுடைய நோக்கம் சீசிங் ராஜாவை சட்டப்படி பிடித்துக் கொண்டு வந்து தண்டனை வாங்கி தர வேண்டும் என்பதுதான். ஆனால் போலீசாரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்துகொள்ளும் போது சில சம்பவங்கள் இதுபோன்று நடந்து விடுகிறது.
இன்றைய சம்பவம் கூட, வெளிச்சமே இல்லாமல் இருளாக இருந்த நேரத்தில் புதரில் இருந்து இரண்டு ரவுண்டு அவர் சுடும் போது இன்ஸ்பெக்டரை காப்பாற்ற வேறு வழியில்லை. அதனால்தான் இந்த என்கவுண்டர் நடந்தது.
அவர் துப்பாக்கியை புதரில் புதைத்து வைத்திருந்தது போல் வைத்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அதன் பிறகு தான் விவரங்கள் தெரியவரும். தடய அறிவியல் விசாரணையும் நடந்து வருகிறது” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
யூடியூப் செய்த சேட்டை… ‘நிறுத்து’ என காட்டமான நடிகை சிம்ரன்
அதிமுக ஆட்சியில் 10% ஒப்பந்தங்கள் கூட நிறைவேற்றவில்லையா? – ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!