நாம் தமிழர் சீமான்… அணிவகுக்கும் ஆடியோக்கள்… அடுத்து வரும் வீடியோக்கள்! அதிர்ச்சிப் பின்னணி!

Published On:

| By Aara

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானையும், அவரது கட்சியின் நிர்வாகிகளையும் மையமாக வைத்து, கடந்த சில தினங்களாக இணையத்தில் வெளியாகி வரும் ஆடியோக்கள் பரபரப்பை கிளப்பி வருகின்றன.

ஒவ்வொரு நாளும் இன்னிக்கு என்ன நாம் தமிழர் ஆடியோ என்று கேட்கும் அளவுக்கு ஆடியோக்கள் வெளியாகி வருகின்றன.

ADVERTISEMENT

குறிப்பாக இந்த ஆடியோக்களில் பலவற்றை பாஜகவின் முன்னாள் நிர்வாகியும், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான திருச்சி சூர்யாதான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த ஆடியோக்கள் சமூக தளங்களில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT

ஜூலை 14 ஆம் தேதி திருச்சி சூரியா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு ஆடியோ பதிவில் சாட்டை துரைமுருகன், ‘தம்பி… அன்னிக்கு ஒரு விஸ்கி கொடுத்தீல்ல… அதை போட்டோ எடுத்து அனுப்பு’ என யாருக்கோ அனுப்பிய வாய்ஸ் மெசேஜை வடிவேலு காமெடியோடு  ‘கொலாஜ்’ செய்து வெளியிட்டிருந்தார்.

ADVERTISEMENT

 

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகன், மேடைகளில் மதுவுக்கு எதிராக கடுமையாக பேசி வரும் நிலையில் அவர் விஸ்கி கேட்கும் ஆடியோ சர்ச்சையானது.

அடுத்து ஜூலை 16 ஆம் தேதி சாட்டை துரைமுருகனுக்கு இயக்குனர் அமீர் அனுப்பிய சுமார் நான்கு நிமிட வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜை வெளியிட்டார் திருச்சி சூர்யா.

தான் துவக்கிய புதிய அலுவலகத்தின் துவக்க விழாவுக்கு அமீரை அழைத்திருந்தார் சாட்டை துரைமுருகன். அதற்கு பதிலளித்து அமீர் பேசிய ஆடியோ மெசேஜ்தான் அது.

 

சீமானுக்கும் தனக்குமான மன நெருடல்களையும், நாம் தமிழர் கட்சியினர் தன்னைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்து பேசிவருவதையும் அந்த ஆடியோ மெசேஜில் குறிப்பிட்டிருக்கிறார் அமீர். இந்த ஆடியோவும் சர்ச்சையானது.

அடுத்ததாக ஜூலை 18 ஆம் தேதி சீமானின் குரலில் வீடியோ வெளியிட்டார் திருச்சி சூர்யா.

ஜெயலலிதாவுக்கு ஒரு காலத்தில் ஜோதிட ஆலோசனைகள் சொன்ன, தற்போதைய அதிகார வர்க்கத்துக்கும் நெருக்கமான ஜோதிடர் ஒருவருடன் சீமான் பேசும் ஆடியோ அது. நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியான வனிதாவின் பதவி உயர்வுக்காக திமுக அரசுத் தலைமையிடம் பேசுமாறு சீமான் அந்த ஜோதிடரிடம் கேட்கிறார்.

இதையடுத்து நாம் தமிழர் கட்சிக்குள் பெரும் சலசலப்பை உருவாக்கியது கட்சியின் முன்னணி பெண் பிரமுகரான காளியம்மாள் குறித்து சீமான் பேசிய ஆடியோ துண்டு.

 

“இன்னும் ஒரே ஒரு பிசிறு இருக்கு… காளியம்மா… இன்னும் ஒண்ணு சிவசங்கரன் அவன்… ஒரு பிசிறு இருக்கு. ரெண்டையும் தட்டிட்டம்னா சரியாயிடும்” என்று பேசுகிறார் சீமான்.

இதையடுத்து சவுக்கு சங்கருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் மாலதியிடம் சீமான் பேசியதாக வெளியானது ஆடியோ. தொடர்ந்து சவுக்கு சங்கர் தன்னை கடுமையாக விமரிசித்து வந்த நிலையில், அதற்காக மாலதியிடம் பேசியிருக்கிறார் சீமான்.

அந்த ஆடியோவில், ‘எனக்கும் உங்களுக்கும் என்ன இடைவெளி? அதிகாரத்துல இருக்குறவனை பேசுங்க… நான் என்ன பண்ணேன்… நீங்கதான் சொல்லுங்க நான் என்னதான் தவறு பண்ணேன்…” என்று கேட்கிறார் சீமான்.

இப்படியாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி என ஒவ்வொரு ஆடியோவாக வெளிவந்து அக்கட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞரான சங்கர் டிஜிபி அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

இந்த ஆடியோக்கள் வெளியான பின்னணி என்ன?

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் யு ட்யூபருமான சாட்டை துரைமுருகன் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் திருச்சி சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். திருச்சி திமுக ஐடி விங் நிர்வாகி அருண் என்பவர் கொடுத்த புகாரின் பேரில்தான் இந்த கைது.

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் சீமான் முன்னிலையில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரை பற்றி மிகவும் அவதூறான வகையில் பாடல் பாடினார். அந்த பாடலில் அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தை வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்குள் வருவதாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

அப்போது சாட்டை துரைமுருகனிடம் இருந்த ஐ போன், சாம்சங் கேலக்ஸி போன் என இரு போன்களை போலீஸார் கைப்பற்றினர்.

அது வன்கொடுமை தடுப்புசட்ட வழக்கு என்பதால், விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி தான் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் திருச்சி டிஎஸ்பி ஆனந்த் தான் விசாரணை அதிகாரி. அவர்தான் சாட்டை துரைமுருகனின் போன்களை பறிமுதல் செய்தார்.

விசாரணைக்காக சாட்டை துரைமுருகனின் போன் பாஸ்வேர்டை போலீஸ் கேட்க அவரும் சொல்லியிருக்கிறார். இதன் பின்னர்தான் போலீஸாருக்கு சாட்டை துரைமுருகன் போனில் இருக்கும் இந்த ஆடியோ ‘வில்லங்க விஷயங்கள்’ எல்லாம் கிடைத்திருக்கின்றன.

மறைந்த திமுக தலைவர் கலைஞரை மிகக் கொச்சையாக விமர்சனம் செய்ததை சீமான் தொடர்ந்து நியாயப்படுத்திய நிலையில்… திருச்சி எஸ்.பி. வருண் குமாரையும் கடுமையாக விமர்சித்தார். இதனால் ஆட்சி மேலிடத்தோடு திருச்சி போலீஸுக்கும் நாம் தமிழர் கட்சி மீது கடுமையான கோபம் ஏற்பட்டது.

இதன் விளைவாகத்தான் சாட்டை துரைமுருகன் செல்போனில் இருக்கிற வில்லங்க ஆடியோக்கள் ஒவ்வொன்றாக திருச்சி சூர்யா போன்றவர்கள் மூலம் அதிகாரபூர்வமற்ற வகையில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சாட்டை துரைமுருகன் வெளியிட்ட வீடியோவில், “என்னை கைது செய்த இன்ஸ்பெக்டர், ‘உங்க  போனை  எஸ்.பி. சீஸ் செய்ய சொன்னாரு’ என்றார். ஏற்கனவே அவர் திருவள்ளூர் எஸ்பியாக இருந்தபோது இதேபோல நான் கைது செய்யப்பட்ட நிலையில் என் போனில் இருந்து உரையாடல்களை கட் செய்து வெட்டி ஆடியோக்களை வெளியிட்டார்கள். அதேபோல்தான் இப்போதும் செய்திருக்கிறார்கள்.

இந்த அயோக்கியத் தன அரசியல் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்துதான் நடக்கிறதா? என் செல்போனை எடுத்து போலீஸ் திமுக ஐடி விங்கிடம் கொடுக்கிறது என்றால் இதுதான் பாசிசம்” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “2016 ஆம் ஆண்டு விஜயகாந்த் மக்கள் நல கூட்டணி அமைத்தார். திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது திமுகவுக்கு ஐடி விங் இல்லை. ஆனாலும் சமூக தளங்களில் திமுகவுக்காக தீவிரமாக இயங்கியவர்களிடம் விஜயகாந்தை டோட்டல் காமெடியனாக மாற்றும் அளவுக்கு மீம்ஸ், வீடியோக்கள் கட் செய்து போடும்படி திமுக தலைமை அறிவுறுத்தியது.

இப்போது அதேபோன்ற ஒரு உத்தரவு சீமான் விஷயத்தில் வந்திருக்கிறது. சீமான் என்றைக்கு எங்கள் கலைஞரை கொச்சைப்படுத்தினாரோ… இனி அவரை சும்மாவிடமாட்டோம். ஆடியோக்கள்தானே வந்துகொண்டிருக்கின்றன. இனி வீடியோக்களும் வரும் பாருங்கள்” என்று அடுத்த பரபரப்பைக் கூட்டினார்கள்.

இந்த ஆடியோக்களால் கடும் அப்செட் ஆகியிருக்கும் சீமான் தற்போது பஞ்சாப்பில் சினிமா ஷூட்டிங்கில் இருக்கிறார். அதனால்தான் ஜூலை 21 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி நடத்திய மின கட்டண உயர்வுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

சீமான் பஞ்சாப்பில் இருக்க, அவருடைய, அவரது கட்சியின் இமேஜை பஞ்சாய் பறக்க வைத்துக் கொண்டிருக்கிறது திமுக.

வேந்தன்

பட்ஜெட் எதிரொலி – அதிரடியாய் குறைந்த தங்கம் வெள்ளி விலை – எவ்வளவுனு பாருங்க?

பெண்களுக்காக ரூ.3.5 லட்சம் கோடி… உழைக்கும் மகளிருக்கு விடுதி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share