தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை தொடர்ந்து மரியாதை குறைவாகவும், இரு கட்சியினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையிலான தவெகவினர் செப்டம்பர் 16ல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில். “கோவை டவுன்ஹால் பகுதியில் கடந்த 14-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். சீமான் பேசும்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை மரியாதை குறைவாக பேசியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் வழியில் அமைதியுடன் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் தவெகவினர் செயல்பட்டு வரும் நிலையில், சீமான் விஜய்யை தொடர்ந்து அவமரியாதையாக பேசிவருவது எங்களை மன உளைச்சலுக்குள்ளாக்கியுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து பேசிவந்தால் இரு கட்சியினரிடையே கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே இரு கட்சியினரிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், விஜய்யை தரக்குறைவாகவும் பேசும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்
