bதனித்துப் போட்டியிடுவது ஏன்?: சீமான்

Published On:

| By Balaji

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வாழப்பாடி (ஏற்காடு), ஆத்தூர், கெங்கவல்லி, சின்ன சேலம் (சங்கராபுரம்), தியாக துருகம் (கள்ளக்குறிச்சி), உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

விவசாயி சின்னத்துக்கு ஓட்டுப் போட வலியுறுத்திப் பேசிய சீமான், “இன்று தாய்மொழியில் படிக்க முடியாது, படித்தாலும் வேலை கிடைக்காது என்ற நிலையில் நாம் இருப்பது உலகின் மிக மோசமான அடிமை நிலை. இந்திய துணைக் கண்டம் முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியிருக்கிறார். இந்த நாட்டை எந்நாடு என்று சொல்லிக்கொள்ளத் தமிழ் இனத்துக்குத்தான் உரிமை உண்டு என்றார். ஆனால் அப்படிப்பட்ட ஒரு இனத்தின் மக்கள் நாம் இலவச அரிசிக்கும், தீபாவளி பொங்கலுக்கு வேட்டி சேலைக்கும் கையேந்துகிற ஏழ்மை நிலையில் சிக்கித் தவிப்பது ஏன்? இந்த நிலையிலிருந்து நாம் மீண்டு பெருமையோடு வாழ வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

தமிழர்களுக்குத் திட்டமிட்டுச் சாதி, மதப்பற்று ஊட்டப்பட்டது என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் எழுச்சி ஏற்படுத்த வேண்டும். இந்தத் தேர்தலை மாறுதலுக்கான ஒரு புரட்சியாகப் பார்ப்பதால், தனித்துப் போட்டியிடுகிறோம் என்றார்.

ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட சீமான், “கல்வித் தரத்தில் தென் கொரியா முதலிடத்தில் உள்ளது, அடுத்து சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. ஒரு சின்ன நாடு கல்வித் தரத்தில் சிறந்து விளங்குகிறது. நம் நாட்டிலும் அரசு கல்லூரிகள், பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் அரசை நடத்துவோர்களின் பிள்ளைகள் யாராவது அங்குப் படிக்கிறார்களா? அரசு மருத்துவமனையில் மருத்துவம் செய்து கொள்கிறார்களா? ஏனென்றால் அவை தரமற்று இருப்பது அவர்களுக்குத் தெரிகிறது. 50 ஆண்டுகளாகத் தரமற்றவர்கள் கையில் அதிகாரத்தைக் கொடுத்ததால் இந்த நிலை இருக்கிறது. அதை மாற்ற வேண்டும்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், உலகளவில் முதலிடத்தில் இருக்கும் வகையில் கல்வியின் தரத்தைக் கொண்டு வருவோம். இலவசமாகச் சிறந்த மருத்துவம், கல்வி, குடிநீரைக் கொடுப்போம். தடையற்ற மின்சாரம் கொடுப்போம்,

கடல் அலையில் ஜப்பான் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அதுபோன்று தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மின் தேவையைப் பூர்த்தி செய்வோம். தமிழகத்தில் ஆண்டுக்கு 4000 டிஎம்சி தண்ணீர் மழை மூலம் கிடைக்கிறது. ஆனால் 2500 டிஎம்சியை வீணாகக் கடலில் கலக்க விடுகிறார்கள். எனவே, அவற்றைத் தேக்கி தண்ணீரின் தேவையைப் பூர்த்தி செய்வோம். படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கு அரசு வேலை கொடுப்போம். இனி படிக்காதவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். எனவே, ஏப்ரல் 6ஆம் தேதி விவசாயி சின்னத்துக்கு வாக்களித்து வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும்.

இதுவரை திமுக, அதிமுகவை வெல்ல வைத்தது ஒரு நிகழ்வு, ஆனால், நாம் தமிழர் கட்சியை வெல்ல வைப்பது வரலாற்றுப் புரட்சி” என்று கூறி வாக்கு சேகரித்தார். சீமானின் பேச்சுக்கு அங்கு கூடியிருந்தவர்கள் கைகளைத் தட்டி வரவேற்பு அளித்தனர்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share