விருப்பமில்லாமல் செய்தது போல் கதறுகிறீர்கள்: சீமான் சர்ச்சை பேச்சு!

Published On:

| By Kavi

நடிகை விஜயலட்சுமியை விருப்பமில்லாமல் பாலியல் வன்கொடுமை செய்தது போல் கதறுகிறீர்கள் என்று சீமான் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. seeman controversial speech

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இரண்டாவது முறை, நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.

ADVERTISEMENT

இதை அவரது வீட்டில் இருந்தவர்கள் கிழித்து எறிந்ததால் சீமான் வீட்டு காவலாளி அமுல்ராஜ், டிரைவர் சுபாகர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இன்று (பிப்ரவரி 28) தர்மபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்,

ADVERTISEMENT

“நீதிமன்றம் விசாரணை நடத்த 3 மாதம் அவகாசம் கொடுத்திருக்கும் நிலையில் 3 நாட்களில் முடிக்க ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் என்ன.

பெங்களூருவுக்கு சென்று அந்தம்மாவிடம் விசாரணை நடத்திய நீங்கள், இங்கு வந்து என்னிடம் விசாரிக்க வேண்டியதுதானே? உங்கள் காவல்துறை தானே இங்கு நிற்கிறது.

ADVERTISEMENT

 சம்மன் ஒட்ட நீங்கள் என் வீட்டுக்கு வந்து நிற்பதற்கு முன் எல்லா ஊடகமும் வந்து நிற்கிறது.

வீட்டில் என் மனைவி இருக்கிறார். அவரிடம் சம்மன் கொடுத்துவிட்டு சென்றிருக்கலாம் தானே? கதவில் ஒட்டிவிட்டு சென்றால் எனக்கு பதிலாக கதவு விசாரணைக்கு வருமா எப்படி?

நான் தலைமறைவாகிவிட்டேனா… தொடர்பு கொள்ள முடியாத இடத்துக்கு சென்றுவிட்டேனா? இல்லை அந்த அழைப்பாணையை நாங்கள் பூஜை அறையில் வைத்துக்கொள்ள வேண்டுமா? எதற்கு இவ்வளவு பதட்டம் அடைகிறீர்கள்.

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு இருக்கும் போது நீலாங்கரை காவல் ஆய்வாளர் அடித்து இழுத்து செல்ல வேண்டிய அவசியம் என்ன?

சம்மனை நான் படிக்க கொண்டு வந்தீர்களா? இல்லை நாட்டு மக்கள் படிக்க கொண்டு வந்தீர்களா? எதற்கு அடித்தீர்கள். அவர்களை நேரடியாக காவல் நிலையம் கூட அழைத்து செல்லவில்லை. ஆனால் இந்த போலீஸ் சென்று படுத்துக்கொண்டார். இதை போலீசார் வழக்கமாக வைத்துள்ளனர்.

என்னுடைய வழக்கில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிற இவர்கள்… அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கில் என்ன செய்தார்கள். பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் என்ன செய்தார்கள்.

அந்த பொம்பளை யாரு? அவர் சொன்னால் குற்றமாகிவிடுமா? ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம். விசாரிக்க வேண்டும். அதன் பிறகு முடிவுக்கு வர வேண்டும்.

என்னமோ வயசுக்கு வந்த புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வெச்சி கற்பழிச்சு விட்ட மாதிரி கதறி கொண்டிருக்கிறீர்கள்.

இதே சீமான்… இயக்குநராக படங்கள் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருக்கிறேன் என்றால் இந்த மாதிரி வழக்கை எடுத்து பேசுவீர்களா? ஒரு முழு அதிகாரமும் சேர்ந்து சுத்துகிறீர்கள் என்றால் என்னை பார்த்து பயந்துவிட்டீர்கள். என் அரசியலை பார்த்து, என்னிடம் மோதி ஜெயிக்க முடியவில்லை.

என்னவோ கல்லூரி பெண்ணை விருப்பமே இல்லாமல் கடத்தி கொண்டு போய் கற்பழித்துவிட்டது போல்… என்னங்கடா உங்கள் நாடகம்?

எவ்வளவு மக்கள் பிரச்சினை இருக்கிறது… அதையெல்லாம் பற்றி பேசவில்லை. எவ்வளவு திமிராக இருக்கிறேன் பாரு… என்னை உன்னால் சமாளிக்க முடியவில்லை. என்னை எதிர்த்து நின்று அரசியல் செய்ய முடியவில்லை.

இவ்வளவு அதிகாரம், பணபலம் இல்லாமல், ஓட்டுக்கு காசு கொடுக்காமல், ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் ஓட்டு வாங்க முடியுமா?

எது பெரியக் கட்சி? நான் தான் பெரிய தலைவன்? நாங்கள் ஒரு ரூபாய் காசு கொடுக்கவில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு பின்புலம் எதுவும் இல்லை. இருந்தும் 15 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை வாக்கு வாங்கி வைத்திருக்கிறோம்.

234லும் திமுக வேட்பாளர்களை தனியாக நிறுத்துங்கள் பார்ப்போம். வாக்குக்கு காசு கொடுக்காமல் என்னை வென்று காட்டுங்கள் பார்ப்போம். கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா என்று பார்த்துவிடுவோம். ” என்று சவால் விடுத்தார்.

மேலும் அவர், “உங்கள் அப்பா முதலமைச்சராக இருந்தவர். நான் சாதாரண விவசாயி மகன். மக்களுக்காக வந்தவன் நான். என்னை சமாளிக்க முடியவில்லை. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அஞ்சுகிற ஆள் கிடையாது நான். சும்மா, இந்த பெட்ரோல் குண்டை பார்த்து எல்லாம் எனக்கு பயமில்லை.

நிஜ குண்டு வீசிய போது என் தலைவனை சென்று பார்த்து வந்தவன் நான். என்னிடம் இந்த பூச்சாண்டி வேலையையெல்லாம் விட்டுவிடுங்கள்.

11 மணிக்கு வர வேண்டுமா? என்னால் எப்போது முடியுமோ? எப்போது வர முடியுமோ அப்போதுதான் வருவேன்?

ஆம்ஸ்ட்ராங் வழக்கு என்னாச்சு? ஞானசேகரன் ஒருவர்தான் அந்த குற்றச் செயலில் ஈடுபட்டாரா. அந்த சார் யார்?

நீங்கள் எல்லாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த அதிகாரம் நிலையானது கிடையாது. காலச் சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கிறது” என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய சீமானிடம், அந்த காவல் ஆய்வாளர் பின்புலம் என்பது ராஜீவ் காந்தி கொலையின் போது இவரின் தந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“அவரை எனக்கு தெரியும். என் அண்ணன் சந்திரசேகரன் எஸ்.எஸ்.பியாக இருக்கும் போது அவரை பார்த்திருக்கிறேன். பாதுகாப்புக்கு என் வீட்டில் நின்றவர்தான். எல்லோரிடமும் நன்றாக பேசியவர்தான். திடீரென அவருக்கு ஆவேசம் வந்துவிட்டது. அவருடைய அப்பா இறந்ததற்கு நம்மால் எதுவும் செய்ய முடியாது.

ராஜீவ் காந்தி இறந்ததில் உங்களுக்கு இவ்வளவு வலி இருக்கிறது என்றால் அவரால் 20000 பேர் இறந்திருக்கிறார்கள். அதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? எல்லாவற்றையும் பேசுங்கள்” என்று குறிப்பிட்டார்.

நாம் தமிழர் கட்சி மகளிரணி நிர்வாகிகள் முன்னிலையில் சீமான், “என்னமோ வயசுக்கு வந்த புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வெச்சி கற்பழிச்சு விட்ட மாதிரி கதறிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று பேசியது சர்ச்சைக்குரியதாகியுள்ளது. seeman controversial speech

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share