ஈரோடு கிழக்கு தொகுதியில் 21 வயதுக்குக் கீழ் உள்ள இளம் வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
நாம் தமிழர் கட்சி நல்ல கட்சி தான், நல்ல தம்பிகள் தான், நன்றாக பேசுகிறார்கள். ஆனால் வெற்றி பெற மாட்டார்கள்.
ஆகையால், வெற்றி பெறும் கட்சிக்கே வாக்களிப்போம் என்ற மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள், இப்படி ஒரு கருத்தை தொடர்ந்து மேடைகளில் கூறிவருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமானின் இந்த பேச்சுகள் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகமான பார்வைகளை பெற்றுவருவது வழக்கம். அவரது பேச்சை கேட்டு மெய்சிலிர்ப்பவர்களில் முக்கியமானவர்கள் இளைஞர்கள்.

குறிப்பாக 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்களை சீமானின் அதிரடியான பேச்சுகள் வெகுவாக கவரும்.
இப்படி தொடர்ந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்று வரும் சீமான் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் தங்களுடைய கட்சி சார்பில் மேனகா நவநீதனை வேட்பாளராக நிறுத்தினார்.
தற்போது அந்த வேட்பாளர்களுக்கு தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் 21 வயதுக்குக் கீழ் உள்ள இளம் வாக்காளர்களிடையே அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
மக்கள் ஆய்வு நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சியை விட அதிகமாக நாம் தமிழர் கட்சிக்கே வாக்களிக்க இளம் வாக்காளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பேராசிரியர் டாக்டர் ச. ராஜநாயகம் வழிகாட்டுதலில் நடத்தப்பட்ட மக்கள் ஆய்வு கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி,
முதல் வாக்காளர்கள் மற்றும் 21 வயதுக்குப்பட்ட இளம் வாக்காளர்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு அமோக ஆதரவு வெளிப்படுவது தெரியவந்துள்ளது.
21 வயதிற்குள்ளான வாக்காளர்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு 29.5 சதவிகிதம் ஆதரவும், காங்கிரஸ் வேட்பாளருக்கு 28.5 சதவிகித ஆதரவும் உள்ளது.
அதாவது, காங்கிரஸை முந்தி, இளம் வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி.
அதிமுகவுக்கு 17 சதவிகிதம், தேமுதிகவுக்கு 3 சதவிகித ஆதரவு கிடைத்துள்ளது. மேலும் கல்வி, தொழில், சாதி, மதம், பாலினம் ஆகிய பிற அனைத்துக் காரணிகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் வேட்பாளர் முதலிடத்திலும் அதிமுக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
பயணிகளுக்கு குட் நியூஸ்…தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்!
‘குட் மார்னிங் அமெரிக்கா’: ராம்சரண் பங்கேற்றது சினிமாவுக்கு பெருமை!