தமிழகத்தின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக இன்றும் (ஏப்ரல் 25) சோதனை தொடர்கிறது.
சென்னை சேத்துப்பட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜி ஸ்கொயர் நிறுவனம், இதுவரை 6,000க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மனைகளை விற்றுள்ளது.
இந்தச்சூழலில் ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவுக்கு நெருங்கிய தொடர்புடையது என்றும் இந்நிறுவனத்துக்காக விதிகள் திருத்தப்பட்டு நில அப்ரூவல் வழங்கப்படுவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 38 ஆயிரம் கோடி என்றும் கூறியிருந்தார்.
இந்தச்சூழலில் நேற்று முதல் ஜிஸ்கொயருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில், கன்டோன்மென்ட் பகுதியிலும், கோவை, அவிநாசி சாலை பீளமேட்டில் உள்ள ஜி ஸ்கொயர் குழும அலுவலகத்திலும், கோவை புலியகுளம் அருகே உள்ள மகேந்திரா பம்ப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகேந்திர ராம்தாஸ் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
சென்னையில் சேத்துப்பட்டு தலைமை அலுவலகம், அண்ணாநகர் எம்.எல்.ஏ.மோகன் மகன் கார்த்திக் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தினர். நீலாங்கரையில் இருக்கும் ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதுபோன்று நேற்று 50 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் இன்று ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் வீடு, நிறுவனங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடந்து வருகிறது.
இதனிடையே ஜிஸ்கொயர் நிறுவனம் ரெய்டு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “கடந்த சில மாதங்களாக, எங்கள் அமைப்பு பல தரப்பிலிருந்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் தேவையற்ற துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
இது எங்களுக்குச் சவாலான காலமாக இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டுகளின் அதிகாரப்பூர்வத் தன்மையை மதிப்பீடு செய்யும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
எங்கள் மீதான குற்றச்சாட்டுகளின் மீது உண்மை இல்லை என்பதை இந்த வாய்ப்பின் மூலம் அழுத்தமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம். எங்கள் பங்குதாரர்களுக்கு நேர்மையுடன் இருக்கவேண்டும் என்பதையும் நம்புகிறோம்.
எங்களிடம் மறைக்கவும், பயப்படவும் எதுவும் இல்லை. இந்த சோதனையில் அதிகாரிகளுக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்புத் தருகிறோம்.
இந்த நேரத்தில் எங்களுடன் உறுதுணையாக இருக்கும் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா