தமிழகத்தில் இன்று கனமழை: எந்தெந்த மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை?

Published On:

| By Prakash

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) கனமழை காரணமாக, ஒருசில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்துவருகிறது. அந்த வகையில் நாளையும் (ஆகஸ்ட் 5) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர் மழையின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரீத் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் வால்பாறை தாலுகாவுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


ஜெ.பிரகாஷ்

டிஜிட்டல் திண்ணை: கைது வளையத்தில் இரு தமிழக அமைச்சர்கள்: அமித் ஷாவின் அமலாக்க அஜெண்டா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share