பள்ளிப் பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (ஜனவரி 25) தீர்ப்பளித்துள்ளது.
தாம்பரம் அருகே சேலையூரில் செயல்பட்டு வரும் சீயோன் என்கிற தனியார் பள்ளியில் படித்து வந்த சிறுமி ஸ்ருதி, பள்ளி பேருந்திலிருந்த ஓட்டையில் விழுந்து கடந்த 2012 ஜூலை 25ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பள்ளி வாகனத்தைப் பொதுமக்கள் தீ வைத்து எரித்தனர்.
சிறுமி உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து பள்ளி செயலாளர் , ஓட்டுநர், வாகனத்தை முறையே ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்கிய மோட்டார் வாகன அலுவலர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பள்ளி செயலாளர் விஜயன், அவரது சகோதரர்கள் ரவி, பால்ராஜ், மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகிய 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி காயத்ரி உத்தரவிட்டுள்ளார்.
பிரியா