சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 3) இடைக்கால தடை விதித்துள்ளது. SC stays High Court order in seeman case
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், “வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி. நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில், வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்ற அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும் இருதரப்புக்கும் இடையே செட்டில்மெண்ட் அடிப்படையில் முடிவு எட்டப்படுமா என்பதை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் எதிர்மனுதாரர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.