துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஜூலை 29-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றி வழங்குவது உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி ஒப்புதல் தரவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு தமது சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்தது. இதனால் இந்த 10 மசோதாக்களும் சட்டங்களாகி நடைமுறைக்கு வந்துவிட்டன.
இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார். SC list tamilnadu plea to transfer vice chancellor
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் விசாரித்தனர். கடந்த மே 21-ஆம் தேதி துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட, சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தமிழ்நாடு அரசு தரப்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மே 26-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பி.வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். SC list tamilnadu plea to transfer vice chancellor
பல்கலைக்கழக மானியக் குழு சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தம்ம சேஷாத்ரி நாயுடு ஆகியோர் ஆஜராகி, கோடைக்கால விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தினர்.
அப்போது வழக்கறிஞர் வில்சன், “இந்த வழக்கிற்கு முன்னுரிமை அளித்து கோடைக்கால அமர்விலேயே இதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று வாதிட்டார்.
இதனையடுத்து, துணை வேந்தர்கள் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை ஜூலை 29-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். SC list tamilnadu plea to transfer vice chancellor
