ஒரு இயக்குனரின் இரண்டாவது படம் என்பது அவரைச் சார்ந்தவர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திரையுலகையும் பதைபதைக்க வை7க்கும். அந்த அளவுக்கு, சம்பந்தப்பட்ட இயக்குனரின் முதல் படம் சிறப்பானதாக அமைந்திருக்க வேண்டும். ஒருவேளை இரண்டாவது படம் சொதப்பலாக இருந்தாலோ அல்லது அந்த வாய்ப்பினைப் பெறுவதற்குக் கடுமையாக போராட வேண்டியிருந்தாலோ, அவரது பெயர் ‘மறதிப் பட்டியலில்’ இடம்பெற்றுவிடும். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ மூலமாகக் கவனம் ஈர்த்த இயக்குனர் சுரேஷ் சங்கையாவும் அப்படித்தான் நம் நினைவடுக்குகளில் இருந்து கழன்று போனார். ஆனாலும், விடாப்பிடியாகப் போராடித் தற்போது ‘சத்திய சோதனை’யைத் தந்திருக்கிறார். இந்தப் படம் எப்படிப்பட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது?
கொலை மீதான விசாரணை!
இரவு நேரம். ஒரு பொட்டல் காடு. ஊரையே அடித்து உலையில் போடும்விதமாகத் தெரியும் ஒரு நபரைச் சிலர் வெட்டிக் கொலை செய்கின்றனர். அடுத்த நாள், வெயில் சுள்ளென்று அடிக்கும் நேரத்தில் அவ்வழியே செல்கிறார் மேலச்செவல்பட்டியைச் சேர்ந்த பிரதீப் (பிரேம்ஜி). தனது காதலானது திருமணம் எனும் கட்டத்தை அடையப்போகும் மகிழ்ச்சியில் திளைக்கும் அவர், காதலியைச் சந்திக்கப் பேயம்பட்டிக்குப் பயணம் மேற்கொள்கிறார். அப்போதுதான், அந்த பிணைத்தைப் பார்க்கிறார். வெயிலில் கிடைக்கும் அந்த உடலை இழுத்து நிழலில் வைப்பதோடு, அதிலிருக்கும் மொபைல், வாட்ச், மெலிதான தங்க சங்கிலியைக் கழற்றி எடுத்துக்கொள்கிறார். அதோடு நில்லாமல், சாலையில் தனியாக நடந்து செல்லும் ஒரு மூதாட்டியையும் தனது வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்கிறார். பேயம்பட்டி காவல்நிலையம் அருகே, அந்த மூதாட்டி இறங்கிக் கொள்கிறார். அதன்பிறகு, பிரதீப் தனியாகச் சென்று தான் எடுத்துவந்த பொருட்களை போலீசாரிடம் ஒப்படைக்கிறார்.
அதற்குள், அருகிலிருக்கும் வேப்பம்பட்டி காவல்நிலையத்தில் ‘நாங்கள் தான் கொலை செய்தோம்’ என்று நான்கு பேர் சரணடைகின்றனர். ஆனால், அந்த பிணம் கிடக்கும் இடமோ பேயம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்டது. பிரதீப்பின் கைங்கர்யம் தான் அதற்குக் காரணம். இதனால், அந்த வழக்கு பேயம்பட்டிக்கு மாற்றப்படுகிறது. அதேநேரத்தில், கொலையானவரின் கழுத்தில் கொத்தாகக் கிடந்த தங்கச் சங்கிலிகள் திருடு போனது தெரிய வருகிறது. உடனே, அந்த நகைகளை எடுத்தது பிரதீப் என்று கருதுகின்றனர் போலீசார். விசாரணை என்ற பெயரில் அவரைப் பிழிந்தெடுக்க, ‘நான் நகைகளை எடுக்கவில்லை’ என்பதே அவரது பதிலாக இருக்கிறது. போலீசார் அதனை நம்புவதாக இல்லை. அதேநேரத்தில், வேப்பம்பட்டி போலீசாரும் ‘நகை கிடைத்ததா, எங்களுக்கும் பங்கு வேண்டும்’ என்று கேட்டு பேயம்பட்டி போலீசாரை நச்சரித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், அடி தாங்க முடியாமல் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் வாக்கிடாக்கியையும் எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடுகிறார் பிரதீப். அவரை வலை போட்டு தேடுகின்றனர் போலீசார். இதன் தொடர்ச்சியாக, கொலையாளிகளை மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்கின்றனர் பேயம்பட்டி போலீசார். அப்போது, இந்த வழக்கில் பிரதீப்பின் பங்கும் தெரிய வருகிறது. அதனால், வேறு வழியில்லாமல் பிரதீப்பையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறது காவல் துறை.
அதன்பிறகு என்னவானது? பிரதீப் போலீசாரிடம் மாட்டினாரா? நீதிமன்ற வழக்கு விசாரணையில் அவருக்குத் தண்டனை கிடைத்ததா? உண்மையில், நகைகளைத் திருடியது யார் என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘சத்தியசோதனை’ திரைக்கதை.
என்னதான் கொலை, விசாரணை என்று கதை தொடங்கினாலும், முக்கால்வாசி திரைக்கதை கொலை செய்யப்பட்டவர் அணிந்திருந்த நகை என்னவானது என்பதையே சுற்றி வருகிறது.
ஆங்காங்கே சிரிப்பு!
கொஞ்சம் சீரியல், கொஞ்சம் நகைச்சுவை நிகழ்ச்சி, இடையிடையே சமூக அரசியல் பேசும் செய்தி விவாதங்கள் என்று டிவி பார்க்கும் எபெக்டை உண்டு பண்ணுகிறது திரைக்கதை; அதேநேரத்தில், வித்தியாசமான திரையனுபவத்தைத் தருகிறது. இந்த ட்ரீட்மெண்ட் கொஞ்சம் புதுசு என்பதால், சட்டென்று இப்படம் ரசிகர்களைக் கவர்வது கடினம். அதேநேரத்தில், சிரிப்பதோடு சிந்திக்கவும் வேண்டும் என்கிற தீர்மானத்தோடு பின்பாதி காட்சிகளை எழுதியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா. ஆங்காங்கே சில காட்சிகள் தொய்வடைய வைத்தாலும், அதையும் மீறி ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை முடிவில் தருகிறார்.
பெரும்பாலான காட்சிகளில் ‘கிம்பல்’ சகிதமாகச் சுற்றியலைந்து ‘ஸ்டெடிகேம்’ எபெக்டை திரையில் தருகிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண். ஒவ்வொரு பிரேம் வைப்பதிலும் ‘டெப்த்’ என்ற வஸ்துக்காக மெனக்கெடாமல், இயக்குனரின் எண்ணத்தைச் சரியாக ரசிகர்களுக்குக் கொண்டுசென்று சேர்த்தால் போதும் என்று உழைத்திருக்கிறார்.
வெங்கட் ராஜனின் படத்தொகுப்பில் ஞானசம்பந்தன் இடம்பெறும் நீதிமன்றக் காட்சிகள் ‘ஆஹா’ என்றமைந்திருக்கின்றன. போலவே, ஒரு நீரோட்டம் போலத் திரையில் கதையில் பாய்ந்தோடுவதற்கு அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார். வாசுதேவனின் கலை வடிவமைப்பில் கிராமத்துப் பின்னணியிலான காவல்நிலைய செட்டப்பும், மூதாட்டியின் வீடும் அற்புதமான அனுபவத்தைத் தருகின்றன.
எம்.ரகுராம் இசையில் ’பார்த்தாலே பாதகத்தி’பாடல் ரசிக்க வைக்கிறது. கிட்டத்தட்ட அதைவிட ஒரு படி மேலாகவே அமைந்திருக்கிறது தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை. நகைச்சுவைக் காட்சிகளுக்கென்று ஒரு இசை ஒலிக்குமே, அதனை அவர் மிகச்சரியாகக் கையாண்டிருக்கிறார்.
முதல் படத்தில் விதார்த் – ரவீணா ரவி ஜோடியைத் திரையில் காட்டிய சுரேஷ் சங்கையா, இதில் பிரேம்ஜி – ஸ்வயம் சிதாவை ஜோடி சேர்த்திருக்கிறார். அவர்களது ரொமான்ஸ், காமெடி எல்லாம் ரசிக்கும்படியாகவே உள்ளது; ஆனால், போலீசாரிடம் அடி வாங்கியபிறகும் விடாமல் ‘லந்து’ கொடுக்கும் பாத்திரத்தில் பிரேம்ஜி தோன்றியிருப்பதுதான் கொஞ்சம் இடிக்கிறது. அவரது ‘சிரிப்பு லுக்’, காவல் துறையைக் கடுமையாக விமர்சிக்கும் காட்சியமைப்பை முழுக்க காமெடி சரவெடி ஆக்குகிறது.
ஸ்வயம் சிதா சில பிரேம்களில் அழகாகத் தோன்றியிருப்பதோடு, தேவையான அளவுக்கு நடித்தும் இருக்கிறார். பிரேம்ஜியின் சகோதரியாக வரும் ரேஷ்மா பசுபுலேட்டி, அவரது கணவராக வருபவர், மாஜிஸ்திரேட் ஆக வரும் ஞானசம்பந்தன், கான்ஸ்டபிள் குபேரன் ஆக வரும் ‘சுப்பிரமணியபுரம்’ கே.ஜி.மோகன், மகாதேவனாக வரும் செல்வமுருகன் மற்றும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டராக வருபவர்கள், இன்பார்மராக நடித்தவர், கொலையாளிகள், சந்தேக வழக்கில் கைதானவர்கள் சுமார் ஒன்றரை டஜன் கலைஞர்கள் திரையில் தோன்றி நம்மைச் சிரித்து மகிழ்விக்கின்றனர். இவர்களனைவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவுக்கு மூதாட்டியாக வருபவரின் நடிப்பு அமைந்துள்ளது. அவர் வசனம் பேசும் விதம் மட்டுமே போதும், ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பதற்கு.
இவ்வளவும் இருந்தும் நம்மால் ஆங்காங்கே சிரிக்க முடிகிறதே தவிர, படம் முழுக்க அந்த அனுபவம் கிட்டுவதில்லை.
சின்ன சறுக்கல்!
ஒட்டுமொத்தப் படமும் காவல் துறை விசாரணை நடத்தும் முறையை, அதிலிருப்பவர்களின் செயல்பாட்டை, பொதுமக்களின் அபிப்ராயத்தைத் தாங்கி நிற்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், நகைச்சுவையூட்டும் வார்த்தைகளின் துணையோடு காவல் துறையைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆனால், போலீஸ் பாத்திரங்களின் குணாதிசயங்களிலும் காட்சியமைப்பிலும் யதார்த்தம் ‘மிஸ்’ஸாகியிருப்பதால், அவையெல்லாம் அவல நகைச்சுவையாக மாறவே இல்லை என்பதுதான் வருத்தம் தரும் விஷயம். அதுவே, ’இப்படம் சீரியசான விஷயத்தை தான் பேசுகிறதா’ என்ற ஐயத்தை உண்டுபண்ணுகிறது. ஒரு இயக்குனராக சுரேஷ் சங்கையா சறுக்குமிடம் அதுவே. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இப்படியொரு கதையில் பிரேம்ஜிக்கு பதிலாக வேறொருவர் நடித்திருந்தால் வேறுவிதமான அனுபவம் கிடைத்திருக்குமோ என்ற எண்ணம் அதில் முக்கியமானது. அதேநேரத்தில், எத்தனையோ படங்கள் இலக்கின்றித் திரியும் திரைக்கதைகளைத் தாங்கி வந்து நம்மைப் பாடாய் படுத்துகையில் புதிய திசை நோக்கி செல்கிறதே என்ற பாராட்டுக்கும் உரித்தாகிறது ‘சத்திய சோதனை’.
மிகவும் குறைவான தியேட்டர்களில் வெளியாகியிருப்பதும் கூட, இப்படம் பரவலான ரசிகர்களைச் சென்றடைவதில் சுணக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. ஆதலால், ஓடிடியில் வெளியாகும்போது இப்படத்தின் ‘வெற்றி முகம்’ எப்படிப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்!
உதய் பாடகலிங்கம்
’தக்காளிக்கு பதில் இத வாங்குங்க!’ – ஐடியா சொல்லி விமர்சித்த எடப்பாடி