சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் லாக்கப் மரணங்கள் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர், தாம் அப்ரூவராக விரும்புவதாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Sathankulam Case
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்தனர். போலீசார் தாக்குதலால் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர் உட்பட 9 பேரை கைது செய்தது. இவ்வழக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் 7 முறை டிஸ்மிஸ் செய்யப்பட்டன.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர், இவ்வழக்கில் அப்ரூவர் ஆக விரும்புகிறேன்; இந்த சம்பவத்தின் போது இதர போலீசார் என்ன செய்தனர் என்பதையும் வெளிப்படுத்த விரும்புகிறேன்; ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கிடைக்க நான் அப்ரூவர் ஆகிறேன் என மனுத் தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த மனு மீது சிபிஐ, ஜெயராஜ் மனைவி செல்வராணி ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது மதுரை நீதிமன்றம். இவ்வழக்கின் நாளை (ஜூலை 24) ஶ்ரீதர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
