தினகரன் அழுத்தம்: விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா

Published On:

| By Balaji

உடல் நலக் குறைவால், பெங்களூரு சிறையில் இருந்து நேற்று அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சசிகலா, இன்று (ஜனவரி 21) பகல் தனியார் மருத்துவமனையான விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மின்னம்பலத்தில் இன்று பகல் 1 மணி பதிப்பில் [தனியார் மருத்துவமனையா?சிறையா? டெல்லி வரை பேசும் தினகரன்](https://minnambalam.com/politics/2021/01/21/32/sasikala-private-hospital-prison-ttv-dinakaran-knock-delhi-doors) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியில், “விடுதலை ஆவதற்கு இன்னும் ஏழு நாட்களே இருப்பதால்… தனியார் மருத்துவமனையில் சேர்த்து உடல் நலம் தேறிய பிறகு 27 ஆம் தேதியோ அதற்கு முன்னதாகவோ சிறைக்குச் சென்று உடனடியாக வெளியே வந்துவிடலாம் என்பது அவர்களின் திட்டம். இப்போதைய நிலையில் மீண்டும் அவரை ஏழு நாட்கள் சிறைக்குள் மருத்துவக் கண்காணிப்போடு வைத்திருக்க வசதி இருக்காது என்பதால் தனியார் மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்து வருகிறார்கள்.

ஆனால் அரசு மருத்துவர்களோ, ‘சசிகலாவுக்கு இருமுறை கொரோனா டெஸ்ட் எடுத்தாகிவிட்டது. இருமுறையும் நெகட்டிவ்தான் வந்துள்ளது.அவருக்கு பயப்படும் அளவுக்கு ஏதுமில்லை. எனவே இன்று மாலையே அவரை மீண்டும் சிறைக்கு அனுப்பிவிடலாம்’என்று ஆலோசித்து வருகிறார்கள்.

இதையறிந்த டிடிவி தினகரன், மீண்டும் சசிகலாவை சிறைக்கு அனுப்பாமல் தனியார் மருத்துவமனையில் சேர்க்க உதவுமாறு டெல்லி வரை பேசிவருகிறார்”என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படியே தினகரன் டெல்லியில் வைத்த அழுத்தம் கலந்த வேண்டுகோளின் அடிப்படையில் கர்நாடக உள்துறை மூலமாக கர்நாடக சிறைத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் சசிகலா பௌரிங் அரசு மருத்துவமனையில் இருந்து பெங்களூருவில் இருக்கும் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சக்கர நாற்காலியில் அமர்ந்து அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலாவைப் பார்த்து கூடியிருந்த தொண்டர்கள் அம்மா அம்மா என உரக்க குரலெழுப்ப, திரும்பிப் பார்த்து சிரித்து கையெடுத்து கும்பிட்டும் கையசைத்தும் ரியாக்ட் செய்தார் சசிகலா.

பார்ப்பதற்கு தளர்ச்சியாக இருந்தாலும் கூட்டத்தைப் பார்த்ததும் சசிகலா முகத்தில் சட்டென ஒரு புன்னகை தோன்றியது.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “சசிகலா அவர்களுக்கு சிடி ஸ்கேன் எடுப்பதற்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கே அவர் சோதனை முடிவைப் பொறுத்து சில நாட்கள் இருப்பார். இப்போதைக்கு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்” என்று கூறினார்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share