சசிகலா: தனியார் மருத்துவமனையா? மீண்டும் சிறையா- டெல்லிவரை பேசும் தினகரன்

Published On:

| By Balaji

பெங்களூரு பரப்பன அக்ராஹா சிறைச் சாலையில் இருந்த அதிமுகவின் முன்னாள் இடைக்காலப் பொதுச் செயலாளர் சசிகலா… நேற்று (ஜனவரி 20) மாலை சிறைக்கு அருகே உள்ள அரசு மருத்துவ ஆராய்ச்சி நிலையமான Bowring and Lady Curzon Hospital மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நேற்று இரவு முதல் சசிகலாவின் உடல் நிலை பற்றி தொலைக்காட்சி ஊடகங்களில் வெவ்வேறு தகவல்கள் பரவிக்கொண்டிருக்க அவரது குடும்பத்தினர் அவசரமாக பெங்களூரு புறப்பட்டுச் சென்றனர்.

ADVERTISEMENT

திவாகரன் குடும்பத்தினர், தினகரன் குடும்பத்தினர், டாக்டர் வெங்கடேஷ் குடும்பத்தினர் என்று மூன்று பிரிவுகளாக பெங்களூருவில் முகாமிட்டு, சசிகலாவின் உடல் நிலை பற்றியும் அவரை வேறு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது பற்றியும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரமாகவே சசிகலாவுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. சர்க்கரை அளவிலும் பிரச்சினை இருந்துள்ளது. சிறை மருத்துவர்கள் பார்த்துக் கண்காணித்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று (ஜனவரி 20) மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சசிகலாவின் வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியனுக்கு தகவல் சொல்லிவிட்டு மாலை 4.30 மணி வாக்கில் அருகே உள்ள பௌரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

சசிகலா மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது அவரது ஆக்ஸிஜன் அளவு 79 ஆக இருந்திருக்கிறது. அவருக்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் கொடுத்திருக்கிறார்கள். அதையடுத்து மெல்ல மெல்ல அவரது ஆக்ஸிஜன் அளவு 92 க்கு வந்தது. இதையடுத்து ஆக்ஸிஜன் கொடுப்பதை நிறுத்தினார்கள். பயப்பட ஏதுமில்லை என்று சசிகலாவிடம் சொன்ன டாக்டர்கள் அவரை நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்கள். மேலும் அவர் சாதாரண வார்டில்தான் இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனைக்குச் சென்ற திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த்… சசிகலாவை பார்த்தே ஆக வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்தோடு பிரச்சினை செய்ததை அடுத்து அவரை பார்க்க அனுமதித்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

நேற்று இரவே பெங்களூரு சென்ற டிடிவி தினகரன் இன்று காலை சசிகலாவை சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். தனக்குக் கிடைத்த தகவல்படி சசிகலா நன்றாக இருக்கிறார் என்று கூறினார். ஆனால் சசிகலாவின் சகோதரர் திவாகரனோ, ‘சசிகலாவுக்கு சிறைக்குள் உரிய மருத்துவ வசதிகள் அளிக்கப்படவில்லை. அலட்சியமாக நடத்தப்பட்டிருக்கிறார். இது சந்தேகமாக இருக்கிறது.”என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாம் பெங்களூரு வட்டாரங்களில் இது தொடர்பாக விசாரித்தோம்.

“சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் நிலை சீராகிவிட்டது. பதற்றத்துக்கோ பயப்படுவதற்கோ ஏதுமில்லை. ஆனாலும் அவரது உறவினர்கள் ஒரு நல்ல தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்து பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என கருதுகிறார்கள். விடுதலை ஆவதற்கு இன்னும் ஏழு நாட்களே இருப்பதால்… தனியார் மருத்துவமனையில் சேர்த்து உடல் நலம் தேறிய பிறகு 27 ஆம் தேதியோ அதற்கு முன்னதாகவோ சிறைக்குச் சென்று உடனடியாக வெளியே வந்துவிடலாம் என்பது அவர்களின் திட்டம். இப்போதைய நிலையில் மீண்டும் அவரை ஏழு நாட்கள் சிறைக்குள் மருத்துவக் கண்காணிப்போடு வைத்திருக்க வசதி இருக்காது என்பதால் தனியார் மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்து வருகிறார்கள்.

ஆனால் அரசு மருத்துவர்களோ, ‘சசிகலாவுக்கு இருமுறை கொரோனா டெஸ்ட் எடுத்தாகிவிட்டது. இருமுறையும் நெகட்டிவ்தான் வந்துள்ளது.அவருக்கு பயப்படும் அளவுக்கு ஏதுமில்லை. எனவே இன்று மாலையே அவரை மீண்டும் சிறைக்கு அனுப்பிவிடலாம்’என்று ஆலோசித்து வருகிறார்கள்.

இதையறிந்த டிடிவி தினகரன், மீண்டும் சசிகலாவை சிறைக்கு அனுப்பாமல் தனியார் மருத்துவமனையில் சேர்க்க உதவுமாறு டெல்லி வரை பேசிவருகிறார்”என்கிறார்கள்.

**-வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share