பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 3) வாதம் முன்வைக்கப்பட்டது.
தன்னை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அதிமுக தரப்பில், “கடந்த 2021-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தான் கட்சியின் பொதுச்செயலாளர். வேட்பாளருக்கான சின்னத்தை ஒதுக்குவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திடுவதற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளதாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கட்சியின் வளர்ச்சிக்காக அதிமுக சட்ட விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பழைய விதிகளை அடிப்படையாக கொண்டு சசிகலாவால் வழக்கு தொடர முடியாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் கொண்டு வரப்பட்டது. இதுவரை அந்த நிலை தான் தொடர்கிறது. இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலா நீக்கப்பட்டது செல்லும்” என்று வாதிட்டார்.
இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை நவம்பர் 6-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேஜஸ் திரைப்படம் பார்த்த யோகி ஆதித்யநாத்
தமிழகத்திற்கு 2600 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!