ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்த நிலையில்… இன்று (அக்டோபர் 18) அது சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பொதுவெளிக்கும் வைக்கப்பட்டுள்ளது,
இந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் மரணம் பற்றி மட்டுமல்லாமல் பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகளும் அடங்கியிருக்கின்றன.
அதில் ஒன்றுதான் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூருவில் சசிகலா குடும்பம் போட்ட ரகசிய கூட்டம் பற்றிய தகவல்.
போயஸ்கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றம் மறு வருகை என்ற தலைப்பில் ஆணைய அறிக்கையின் 162 ஆவது பக்கத்தில் தலைப்பிட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
“சசிகலா மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் நெருங்கிய தோழி என்பது பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா 1982 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தபோது அவர்களது நட்பு மலர்ந்தது.
அப்போது எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழகத்தின் முதல்வராகவும் அதிமுகவின் தலைவராகவும் இருந்தார். சசிகலா டாக்டர் ஜெயலிதாவுடன் அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து வந்தார்.
ஜெயலலிதா முதல்வர் பதவியேற்ற பிறகு போயஸ் கார்டன் இல்லம் அவரது முகாம் அலுவலகமாக இருந்தது.
அவர் ஆட்சியில் இல்லாதபோதும் சசிகலா அங்கேயே தங்கியிருந்தார். 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.
புலனாய்வு காவல்துறை தலைவர் கே.ராமானுஜம் கூறுகையில், ‘டெகல்கா என்னும் பத்திரிகையின் பெங்களூரு வெளியீட்டில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக முதல்வருக்கு எதிராக பெங்களூரு ஹோட்டலில் சூழ்ச்சி செய்வதாகவும், பெங்களூரு வழக்கில் முதல்வர் தண்டிக்கப்பட்டால் அடுத்த முதல்வர் யார் என்று திட்டம் தீட்டியதாகவும் கர்நாடக மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் பிதாரி இதுகுறித்து உளவுத் தகவல், வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் வந்தன.
ஆனால்,. மேற்சொன்ன செய்தியை தான் படித்ததாகவும் சங்கர் பிதாரியிடம் இருந்து எந்த தகவலும் பெறவில்லை என்றும் அதை முதல்வருக்கும் வாய்ஸ் மெசேஜ் மூலம் தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார் ராமானுஜம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-வேந்தன்