சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுகவினர் பிரச்சினை செய்செய்ததால் சசிகலா ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி முன்னாள் துணை தலைவரும் அதிமுக பேரவை மாவட்ட துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளருமான ஷெரீப் தலைமையில் அதிமுகவினர் சிலர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று சசிகலாவை சந்தித்து அவரது அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
திண்டிவனத்தில் நடைபெறும் ஷெரீப் மகள் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைக்க நேற்று ஜூன் 4ஆம் தேதி மாலை 5மணிக்கு திண்டிவனம் வந்தார் சசிகலா.
அவருக்கு பலமான வரவேற்பு அளிக்கப்பட்டது, அதன் பிறகு தனியார் ஹோட்டலில் தங்கி கட்சியினரை சந்தித்து வந்தார்.
சசிகலா வரும்போதே சில அதிமுகவினர் அதிமுக கொடியை அகற்று என்று சத்தம் போட்டனர் ஆனால் அதை சசிகலா கண்டுகொள்ளவில்லை.
சசிகலா ஆதரவாளர்கள் சசிகலா வருகைக்கு திண்டிவனம் முழுவதும் அதிமுக கொடி, தோரணங்கள், மற்றும் பேனர்கள் என அசத்தியிருந்தனர். அதைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாத சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் சசிகலா ஆதரவாளர்கள் கட்டியிருந்த அதிமுக கொடிகளை பிடுங்கி போட்டனர். இதனால் அதிமுக மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் மோதல் நிலவியது.
உடனே அதிமுக கொடியை பிடுங்கிய சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை திருச்சி பை பாஸ் சாலையில் சசிகலா தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் சமரசம் செய்து கூட்டத்தைக் கலைத்தனர்.
“சசிகலா வருகைக்கு இப்படிப்பட்ட வரவேற்பு அளிக்கப்படும் என்று சி.வி. சண்முகம் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவரது தரப்பினர் டென்ஷன் ஆகி விட்டனர். சசிகலா ஆதரவாளர்கள் தனது பலத்தை காட்டிவிட்டனர்” என்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர்.
**வணங்காமுடி**
