கட்சியிலிருந்து சசிகலாவை நீக்கவோ பொதுக்குழுவில் திருத்தங்கள் மேற்கொள்ளவோ யாருக்கும் அதிகாரமில்லை என்று சசிகலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 2) வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்தும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளை உருவாக்கி 2018-ஆம் ஆண்டு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தன்னை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், என்.செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.ராஜ கோபாலன் ஆஜராகி, “சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது சட்டவிரோதமானது” என்றார்.
அப்போது நீதிபதிகள் “இடைக்கால பொதுச்செயலாளர் பதவி அதிமுகவில் இருக்கிறதா அதற்கு விதிகள் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர், “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதால் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். எம்ஜிஆர் இறந்தபோது இதுபோன்ற இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதற்கு பொதுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. கட்சியிலிருந்து சசிகலாவை நீக்கவோ, பொதுக்குழுவில் திருத்தம் செய்யவோ யாருக்கும் அதிகாரமில்லை.
பொதுக்குழு மூலம் உறுப்பினர்கள் தான் சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரை சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராக மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்மொழிந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்தும் தேர்ந்தெடுத்தனர்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி, “பொதுக்குழுவிற்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. 2665 பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளரை தவிர பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லை. சசிகலா இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது பொதுக்குழு முறையாக நடைபெறவில்லை” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழக்கு: இறுதி விசாரணை எப்போது?