காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கேரள எம்.பி.சசி தரூர் போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியைச் சந்தித்ததால் ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகினார். இடைக்காலத் தலைவராகச் சோனியா காந்தி பொறுப்பேற்றார்.
இதையடுத்து நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதனால் கட்சியில் சீர் திருத்தம் தேவை என்று குலாம் நபி ஆசாத், சசி தரூர், கபில் சிபில் உள்ளிட்டோர் அடங்கிய மூத்த தலைவர்கள் இடம்பெற்ற ஜி23 குழு தெரிவித்தது.
காங்கிரஸ் குடும்பத்தைச் சாராதவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தொடர்ந்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து விலகினர்.
இதனால் கடும் நெருக்கடியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17ஆம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ள பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சியில் நடைபெறும் தலைமைப் போட்டி போன்று காங்கிரஸ் தலைவர் தேர்தலும் கவனத்தைப் பெறும்,
என்று மலையாள நாளிதழான மத்ரூபூமியில் எழுதியுள்ள திருவனந்தபுர எம்.பி சசிதரூர், இந்த காரணத்திற்காகப் பல வேட்பாளர்கள் தங்களைப் பரிசீலிக்க முன்வருவார்கள்.
நாட்டுக்காகவும், காங்கிரஸ் கட்சிக்காகவும் அவர்களின் தொலைநோக்குப் பார்வைகளைக் கொடுப்பது நிச்சயமாகப் பொதுமக்கள் ஆர்வத்தைத் தூண்டும்.
காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு புத்துணர்ச்சியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் அவர் காங்கிரஸ் தலைமை பதவிக்குப் போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாகவும், முக்கிய காங்கிரஸ் தலைவர்களிடம் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் சோனியா காந்தியை அண்மையில் சந்தித்துப் பேசிய நிலையில்,
அவர் கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சசி தரூரும் போட்டியிடவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இதன்மூலம் அசோக் கெலாட்டை, சசி தரூர் எதிர்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரியா
இருவரும் ராஜினாமா செய்வோம் – மக்கள் முடிவு செய்யட்டும் – ஓ.பன்னீர் செல்வம்
