நடிகர் சந்தானம் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் இருக்கும் ‘டகால்டி’ படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் எழுதி இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படம் மூலமாக பாடகர் விஜய் நரேன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே கொடி, பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் பாடியுள்ளார். டகால்டி திரைப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்திலிருந்து ‘பாரேன் பாரேன்’ என்னும் பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் இன்று(ஜனவரி 10) , இந்தப்படத்தில் இடம்பெறும் ‘கொத்தா கொத்துது போத’ என்னும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
இதன் சிறப்பு அம்சமே முன்னணி இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் கோவிந்த் வசந்தா இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள் என்பது தான். பொங்கல் வெளியீடாக டகால்டி திரைப்படம் வெளியாகும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் படம், இம்மாத இறுதியில் களம் இறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான தில்லுக்கு துட்டு 2 மற்றும் அக்யூஸ்ட் நம்பர் 1 திரைப்படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இதன் காரணமாக டகால்டி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
முன்னணி இசையமைப்பாளர்கள் இருவர் எந்த பேதமும் இன்றி அறிமுக இசையமைப்பாளரின் படத்தில் பாடியிருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். திரைப்படத்தில் இன்னும் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.,”
