சென்னை காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவாலை புதிய டிஜிபியாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 29) நியமனம் செய்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் தலைமை டிஜிபி சி.சைலேந்திரபாபு நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார். ஏற்கெனவே, ஒரு ஆண்டு பணி நீட்டிப்புடன் பணியாற்றி வரும் அவர் ஓய்வு பெற உள்ளார்.
இதனையடுத்து புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
டிஜிபிக்கான போட்டியில் சஞ்சய் அரோரா (டெல்லி காவல் ஆணையர்), பி.கே.ரவி, சங்கர் ஜிவால் (சென்னை காவல் ஆணையர்), ஏ.கே.விஸ்வநாதன் (முன்னாள் சென்னை காவல் ஆணையர்) இருந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் ஆணையராக கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் நியமனம் செய்யப்பட்ட சங்கர் ஜிவாலை, தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து டிஜிபியாக நியமனம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
மேலும் சென்னையின் 109 ஆவது காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா