IPL 2025 : தொடர்ந்து 8 போட்டிகளில் கேப்டனாக வெற்றியை குவித்து வந்த ஸ்ரேயாஷ் அய்யரின் தொடர் வெற்றியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவுக்கு கொண்டு வந்தது. sanju samson got 1st victory over shreyas punjab
சண்டீகரில் உள்ள மஹாராஜா யதவிந்திரா மைதானத்தில் ராஜஸ்தான் அணியை நேற்று (ஏப்ரல் 5) இரவு எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஜோடியான ஜெய்ஸ்வால் (67) மற்றும் கேப்டன் சாம்சன் (38) நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் ரியான் பராக் 43 ரன்கள் விளாச, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
அதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் முக்கிய தூண்களான பிரியான்ஷ் ஆர்யா (0), கேப்டன் ஸ்ரேயாஸ் (10), ஸ்டோனிஸ் (1), பிராப் சிம்ரன் (17) ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர்.
6 ஓவருக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்த பஞ்சாப் அணியை மீட்கும் முயற்சியில் நேகல் வதேரா (62) மற்றும் மேக்ஸ்வெல் (30) விளையாடினர்.
ஆனால் அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி.
காயம் காரணமாக கடந்த 3 போட்டிகளில் இம்பேக்ட் பிளேயராக மட்டும் விளையாடி வந்த சஞ்சு சாம்சன் இன்றைய போட்டியில் தான் கேப்டன் பொறுப்பை ஏற்றார். தனது முதல் போட்டியிலேயே ஸ்ரேயாஷ் அய்யரின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அந்த அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.