சனாதனம் என்பது இந்து மதத்திற்கு மட்டுமானது அல்ல, அது எல்லா மதத்திற்கும் பொதுவானது. அதனால், சனாதனத்தை அழிப்பேன் என்று சொல்வதன் மூலம் அமைச்சர் உதயநிதி எல்லா மதத்தையும் அழிப்பேன் என்று சொல்கிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சையில் இன்று (செப்டம்பர் 6) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மற்றவர்களின் மத உணர்வுகளை பாதிக்கும் படி உதயநிதி பேசியதும் தவறு. அதேபோல் அவர் தலைக்கு விலைபேசுவதும் காட்டுமிராண்டித்தனமானது.
விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாக பேசியிருக்கிறார். சனாதன தர்மம் என்றால் என்ன என்று தெரியாமலே உதயநிதி பேசியிருக்கிறார்.
இங்கு உள்ளதில் பாதி பேர் சனாதன தர்மத்தில் உள்ள தர்மத்தையே மறந்துவிட்டனர். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே தோன்றிய தர்மம் அது.
சனாதன தர்மம் என்பது ஒவ்வொரு மதத்திலும் உள்ள வேதம் மற்றும் கோட்பாடுகள் தான். இப்போது தீண்டாமை எல்லாம் கிடையாது. அனைவரும் சமத்துவத்துடன் இருக்கின்றனர்.
திமுக வினர் தமிழை விலை பேசி எப்படி அரசியல் செய்கின்றனரோ அதைப்போல் மதத்தை தவறாக பேசுகின்றனர்.
கலைஞர், ஸ்டாலின் எல்லாம் இந்து மதத்தையும் கோவில்களையும் இழிவாக பேசுவார்கள். சமஸ்கிருதத்தையும் இழிவாக பேசுவார்கள் ஆனால் அவர்கள் குடும்பத்து பெண்மணிகள் எல்லாம் கோவில் கோவிலாக சென்று வழிபடுகின்றவர்கள் தான்.
அவர்கள் வீட்டில் கூட புரோகிதர்கள், அர்ச்சகர்களை அழைத்து காலில் விழுந்து மரியாதை செய்கின்றனர். திமுகவினர் உள்ளொன்றும் வெளியில் ஒன்றும் வைத்துக்கொண்டு வேசம் போடுகின்றனர். அப்படித்தான் அரசியலிலும் இருக்கின்றனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதனால் உதயநிதி பேசியதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். விளையாட்டுப் பிள்ளையைப்போல் அவர் பேசியிருக்கிறார்.
பொது வாழ்வில் இருக்கும் ஒரு அமைச்சர் மற்றவர்களின் மத உணர்வுகளை புண்படுத்துவது போல் பேசக்கூடாது என்ற அரசியல் நாகரிகம் கூட அவருக்குத் தெரியவில்லை.
அவர்கள் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதால் அவர் மீது இங்கு வழக்கு போடவில்லை. வேறு ஆட்சியாக இருந்திருந்தால் உதயநிதி மீது வழக்கு தொடரப்பட்டு இருக்கும்.
சனாதனம் என்பது இந்து மதத்திற்கு மட்டுமானது அல்ல, அது எல்லா மதத்திற்கும் பொதுவானது.
அதனால், சனாதனத்தை அழிப்பேன் என்று சொல்வதன் மூலம் உதயநிதி எல்லா மதத்தையும் அழிப்பேன் என்று சொல்கிறார். அவரின் இந்த கருத்தை திரும்ப பெற வேண்டும்.” என்றார்.
மேலும், “தேர்தல் வந்தால் இந்துக்களுக்கு நாங்கள் எதிரிகள் இல்லை என்று பேசுவார்கள். திமுகவினர் ரெட்டை வேடம் போடுகின்றனர். கடவுள் பக்தியை கூட துணிந்து காட்ட முடியாத தைரியம் இல்லதவர்கள் அவர்கள்” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
