சனாதனம் தொடர்பான விவகாரத்தை பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலாக்குவதாக உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 31) வாதம் முன்வைக்கப்பட்டது.
சனாதனம் பற்றி பேசிய விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி இந்து முன்னணி நிர்வாகி கிஷோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, “மனுதாரர் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் சனாதனம் குறித்து பாஜகவினர் உதயநிதிக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.
சனாதன வழக்கை பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலாக்குகிறார். உதயநிதி சனாதனம் பற்றி பேசியது தொடர்பான ஆதாரங்களை மனுதாரர் தான் தாக்கல் செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஆதாரங்கள் கேட்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. மனுதாரர் ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதி அனிதா சுமந்த் வழக்கின் விசாரணையை நவம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செல்வம்
