சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படம் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’. கே.கே.ஆர். சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.கே.ரமேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் காளி வெங்கட் மற்றும் நடிகை ரித்விகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ராஜேஷ் யாதவ் மற்றும் வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, படத்தை கே.எல்.பிரவீன் தொகுத்திருக்கிறார். அறிமுக இயக்குநரான ரா.பரமன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்து வெளியிட்டனர். படம் பற்றி இயக்குநர் ரா.பரமன் அப்போது கூறுகையில் “தமிழ்த் திரை உலகில் அரசியலை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அரசியல் தலைவர்களைப் பற்றிய திரைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. முதன்முறையாக அரசியல் கட்சியில் பணியாற்றும் தொண்டர்களைப் பற்றிய படமாக இந்த ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ உருவாகி இருக்கிறது என்றார்.
முதல் பார்வையிலேயே சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தினரையும் உற்றுநோக்க வைத்தது சமுத்திரக்கனியின் பப்ளிக். படத்தின் நாயகர்களுக்குப் பதிலாக மக்களுக்காக உழைத்த சிங்காரவேலர், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன், காயிதே மில்லத், அன்னி பெசன்ட் உள்ளிட்ட நிஜ நாயகர்களை போஸ்டரில் இடம்பெறச் செய்து முதல் படத்திலேயே தன் பக்கம் அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்த்திருந்தார் இயக்குநர்.
தற்போது ‘பப்ளிக்’ ஸ்னீக் பீக் நேற்று வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலேயே, “இந்தப் படத்துல வருகிற காட்சிகள் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையாக எடுக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தணுங்கிற நோக்கம் இல்லை” என்று ஒலிக்கும் காளி வெங்கட்டின் குரல், அவர் பேசுவதை மறுத்து “இருங்க… இருங்கண்ணே. ஏன் அவசரம்? இந்தப் படத்துல வர்ற காட்சிகள் சம்பவங்கள் எல்லாமே நிஜம். இங்கே நடந்ததைத்தான் சொல்லியிருக்கோம். யார் மனசாவது புண்பட்டா நாங்க பொறுப்பு கிடையாது” என்று வரும் அழுத்தமான வசனப் பின்னணியும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்போதே நமக்குள் கடத்திவிடுகிறது. அதற்கடுத்தாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நையாண்டியுடன் வரும் போராட்டக் காட்சிகளும் கச்சா எண்ணெய் விலைக் குறைந்தாலும் விலையை மட்டும் ஏற்றிக்கொண்டே இருக்கும் ஒன்றிய அரசை ‘ட்ரோல்’ செய்து கவனத்தை ஈர்த்து விடுகின்றன.
**இராமானுஜம்**
