‘அவரது வீட்டிற்குள் நுழைந்து, அவரது காரை வெடிக்கச் செய்து கொல்வேன்’ என பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இன்று (ஏப்ரல் 14) மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. salman khan get new bomb death threat
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். இவர் மும்பையில் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.
1998 ஆம் ஆண்டு நடந்த மான் வேட்டை வழக்கில் சல்மான் கானுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
பிஷ்னோய் சமூகத்தினர் மத்தியில் மான் முக்கியத்துவம் வாய்ந்த விலங்காக கருதப்படுகிறது. தங்களது மரியாதைக்குரிய குரு ஜம்பேஷ்வரின் மறுபிறவிகள் தான் மான்கள் என அவர்கள் நம்புகிறார்கள்.

தொடரும் மிரட்டல்கள்!
இந்தநிலையில் தான் கடந்த ஆண்டு பிஷ்னோய் கும்பல் சல்மான் கானை மிரட்டியது. அவர் மான் வேட்டையாடியதாகக் கூறப்படும் வழக்குக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி பணம் செலுத்த வேண்டும் என்பதே அக்கும்பல் கோரிக்கை வைத்தது. அதன்பின்னர் மீண்டும் ஒரு அடையாளம் தெரியாத நபரால் ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டப்பட்டார். இதுதொடர்பாக வழக்குகளும் பதியபட்டன.
எனினும், அவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயல்வது, வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு, கடிதம், மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் போன்றவை அடிக்கடி தொடர்ந்து வருகிறது.
இதனையடுத்து முன்னணி நடிகரான சல்மான் கானுக்கு ’ஒய் பிளஸ் (Y+)’ போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அடிக்கடி பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வரும் அவர், தனது வீடு மற்றும் படப்பிடிப்பு தளத்திற்கு மட்டுமே சென்று வருகிறார்.
இந்த நிலையில், “சல்மான் வீட்டிற்குள் நுழைந்து, அவரது காரை வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்து கொல்வேன்” என வோர்லியில் உள்ள மும்பை போக்குவரத்துத் துறைக்கு வாட்ஸ்அப் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் இன்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மிரட்டலின் நம்பகத் தன்மை குறித்து விசாரித்து வருகின்றனர்.

கொலை மிரட்டல் குறித்து சல்மான் கான்
முன்னதாக ரம்ஜானை முன்னிட்டு அவரது நடிப்பில் வெளியான சிக்கந்தர் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் கானிடம் இந்த கொலை மிரட்டல்கள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “எல்லாம் கடவுள் அல்லா கையில் உள்ளது. நான் எப்போது இறக்க வேண்டும் என்று உள்ளதோ, அப்போது நான் இறந்துவிடுவேன். அவ்வளவுதான்” என கூலாக பதில் அளித்தார்.
