சேலத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் இன்று (அக்டோபர் 14) கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒருவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்கு நவீனா, சுகவானம் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
இருவரும் அப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். நவீனா 12-ஆம் வகுப்பும், சுகவானம் 9-ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இன்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த இருவரும், வீட்டின் முன்பிருந்த அரளி பூவை பறித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் இருவரையும் சரமாரியாக அரிவாளால் கழுத்தில் வெட்டியுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ராஜாவையும் தனசேகர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ராஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சேலம் எஸ்.பி கெளதம் கோயல் மற்றும் போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், தனசேகரின் அப்பாவும், ராஜாவின் அப்பாவும் அண்ணன் தம்பிகள். சொத்து பிரச்சனை காரணமாக இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளதால் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய தனசேகரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களுக்காக போராடிக்கிட்டிருக்கோம்… மழைக் களத்தில் அமைச்சர் நேரு
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் பிரசாந்த் கிஷோர் இவர்தான்… ஆதவ் – அன்புமணி கூட்டணி மூவ்!