சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூன் 29) உத்தரவிட்டுள்ளார்.
பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தராக 2021 முதல் ஜெகநாதன் பணியாற்றி வருகிறார்.
பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் ‘பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி (PUTER) அறக்கட்டளை’ என்ற தனியார் நிறுவனத்தை அரசின் அனுமதி இன்றி தொடங்கியதாக ஜெகநாதன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
அரசு சம்பளம் பெறும் பல்கலைக்கழக பணியாளர்களைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஜெகநாதன் மற்றும் பல்கலையில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் மீது பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் போலீஸில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் ஜெகநாதான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிராக சேலம் கூடுதல் ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஜெகநாதனுக்கு எதிராக சேலத்தில் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர்வது தொடர்பாக ஜூலை 16ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் ஆஜராகி கருத்துகளை முன்வைக்க கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜெகநாதனின் பணி காலம் நாளையுடன் நிறைவடைகிறது. அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய விசிக எம்.எல்.ஏ ஷாநவாஸ், “சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இதுதொடர்பாக . உயர்கல்வித்துறை சார்பில் நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது” என்று பதிலளித்தார்.
சட்டமன்றத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இவ்வாறு பதிலளித்த நிலையில்… துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். அதன்படி
2025 மே 19 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கொடநாடு வழக்கில் இன்டர்போல்… சட்டமன்றத்தில் ஸ்டாலின் அறிவிப்பு!
Comments are closed.