சேலம் அக்கா, தம்பி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தனசேகரனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி, சேலம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 16) உத்தரவிட்டுள்ளது.
சேலம் பனமரத்துப்பட்டி ஒருவாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது சித்தப்பா மகன் தனசேகரன். ராஜாவுக்கு நவீனா (17) என்ற மகளும், சுகன் (எ) சுகவனம்(14) என்ற மகனும் இருந்தனர். நவீனா 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். சுகன் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி ராஜாவுக்கு சொந்தமான தோட்டத்தில் நவீனா, சுகன் இருவரும் பூப்பறித்துக்கொண்டிருந்தனர். அப்போது தனசேகரன் இருபிள்ளைகளையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் துடிதுடித்து உயிரிழந்தனர். அவர்களைக் காப்பாற்ற சென்ற ராஜாவையும் தனசேகரன் இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ராஜா தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை தொடர்பாக பூச்செடிகளுக்குள் துடிதுடித்த உயிர்: சேலம் அக்கா தம்பி கொலை – நடந்தது என்ன? என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று (அக்டோபர் 15) நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், தலைமறைவாக இருந்த தனசேகரனை போலீசார் கைது செய்து, சேலம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்தனர்.
அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து தனசேகரன் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போன் போட்ட புஸ்ஸி ஆனந்த் : போன் எடுக்காத விஜய்… என்ன நடக்கிறது தவெகவில்?
வேலைநிறுத்தம் வாபஸ்… ஆனால்! சாம்சங் நிறுவனத்திற்கு சிஐடியு கண்டிஷன்!