சேலம், மத்திய சிறையில் டியூப்லைட்டை தின்று தற்கொலைக்கு முயன்ற கைதியால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 28 வயது நரேஷ்குமார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வழிப்பறி வழக்கில் மகுடஞ்சாவடி போலீஸார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர் சிறையில் ஏழாவது பிளாக்கில் உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை நரேஷ்குமார் திடீரென தனது அறையில் இருந்த டியூப்லைட்டை உடைத்து அதை தின்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரை அதிகாரிகள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நரேஷ்குமாருக்கு போலீஸ் பாதுகாப்புடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் நரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தன் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துவிட்டதாக கூறினார். சிறையில் டியூப்லைட்டை தின்று கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
**ராஜ்**
