தமிழ் மொழியில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு நெல்லை புனித சவேரியார் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை பா.விமலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலா எழுதிய ‘எண்ட ஆண்கள் ‘ என்ற நூலை தமிழில் திறம்பட விமலா மொழிபெயர்த்துள்ளார். இதற்காக, இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.sahitya akademi award for professor
பா. விமலா, இந்த நூலை தனித்துவமான தமிழாக்கம் மூலம் விரிவாகவும், இலக்கிய நயத்துடனும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும்படி மொழிபெயர்த்துள்ளார். நூலின் உண்மையான உணர்வுகளை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் நேர்த்தியான மொழிபெயர்ப்பாக இது அமைந்துள்ளது. விமலாவுக்கு கிடைத்த இந்த விருது திருநெல்வேலியின் கல்வி மற்றும் இலக்கிய மேம்பாட்டிற்கு கிடைத்த மற்றோரு அங்கீகாரம் என்றே சொல்லலாம்.sahitya akademi award for professor
தனக்கு விருது கிடைத்தது குறித்து பேராசிரியை விமலா கூறியதாவது, ‘ உலக மகளிர் தினத்தில் இந்த விருது எனக்கு கிடைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த நான் எனது குடும்பத்தின் முதல் பட்டதாரி. தந்தை இறந்து விட்ட நிலையில், எனது தாய், கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தார். நான் படிக்க வேண்டுமென்பதற்காக எனது மூத்த சகோதரி படிப்பை நிறுத்தினார்.
முதுநிலை கல்விக்கு பிறகு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றேன். கூடுதலாக ஒரு மொழியாக மலையாளம் படித்தேன். இதனால்தான் என்னால் மலையாளத்திலிருந்து இந்த நாவலை தமிழில் சிறப்பாக மொழி பெயர்க்க முடிந்தது’ என்று தெரிவித்துள்ளார்.