சபரிமலை: போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு வாபஸ்!

Published On:

| By Balaji

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 50 வயதுகுட்பட்ட பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற கேரள அரசு முடிவு செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது, சபரிமலைக்கு 50 வயதுகுட்பட்ட பெண்கள் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கேரளாவில் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பகுதிகளில் இந்த போராட்டத்தால் வன்முறை வெடித்தது. தடியடியும், கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இது தொடர்பாக 50,000க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இன்று(பிப்ரவரி 24) திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சபரிமலை விவகாரம் தொடர்பான மற்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிய செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிற வேளையில், ஐயப்ப பக்தர்களையும், இந்து வாக்காளர்களையும் சமாதானபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விமர்சனமும் எழுந்துள்ளது.

முன்னதாக தமிழகத்திலும் சிஏஏ போராட்டம் தொடர்பான வழக்குகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்து அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share