ADVERTISEMENT

திருமாவிடம் உறுதி காட்டிய சபரீசன்: அன்புமணி மகிழ்ச்சி!

Published On:

| By Balaji

திமுக-சிறுத்தை கூட்டணி இன்றைய நிலவரம்

கடந்த 25ஆம் தேதி நடைபெற வேண்டிய பாமகவின் தலைமை நிர்வாக குழு, ஒத்திவைக்கப்பட்டு ஜனவரி 31ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிர்வாக குழுவில் பாமகவின் கூட்டணி பற்றிய முடிவை நிறுவனர் ராமதாஸ் மேற்கொள்வார் அவருக்குத்தான் அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்று 28ஆம் தேதி பாமக தலைவர் ஜி.கே. மணி வேலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக முக்கிய பிரதிநிதி ஒருவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து, [‘திமுக கூட்டணியில் சிறுத்தைகளுக்கு 2 சீட்டுகள்தான்’](https://minnambalam.com/politics/2021/01/28/23/vck-party-dmk-allaiance-only-two-seats-thirumvavalavan-shock-mkstalin) என்று தெரிவித்ததை மின்னம்பலத்தில் எழுதியிருந்தோம். இதுகுறித்து உடனடியாக ஸ்டாலினை சந்தித்துப் பேச முயற்சித்தார் திருமாவளவன். ஆனால், ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனை பார்க்குமாறு அவருக்கு சொல்லப்பட்டது. இதையடுத்து சபரீசனை 28 ஆம் தேதி காலை திருமாவளவன் சந்தித்திருக்கிறார்.

இந்த சந்திப்பைப் பற்றித்தான் அன்புமணி ஜனவரி 28-ஆம் தேதி இரவு தனது தந்தையும் பாமக கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாசுக்கு ஒரு தகவலை அனுப்பி இருக்கிறார்

ADVERTISEMENT

அதன்படி, “ஜனவரி 28ஆம் தேதி காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக தலைவர் ஸ்டாலின் உடைய மாப்பிள்ளை சபரீசனை சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது சபரீசன் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு சீட்டுகள் தான் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். இதன் மூலம் சிறுத்தைகளை கூட்டணியிலிருந்து வெளியேற்றுவதற்கு திமுக மெல்ல மெல்ல தயாராகிறது. இதுவே பாமகவுக்கு ஒரு சமிக்ஞைதான்” என்று ராமதாசுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார் அன்புமணி.

இதே தகவலை தனது நட்பு வட்டத்தில் இருக்கும் நலம் விரும்பிகளிடமும் மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டிருக்கிறார் அன்புமணி.

ADVERTISEMENT

ஜனவரி 31 ஆம் தேதி பாமகவின் தலைமை நிர்வாகக் குழு கூட இருக்கும் நிலையில்…திமுக-விடுதலைச் சிறுத்தைகள் இடையேயான உறவில் ஏற்பட்டு வரும் மாற்றம் பாமகவின் கூட்டணி பற்றிய அரசியல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதே இந்த விவகாரத்தில் இன்றைய நிலவரம்,

**-வேந்தன்**,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share