இந்திய யு-19 அணி இலங்கை அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 19 வயதுக்குட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டித் தொடர் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 589 ரன்கள் குவிக்க பின்னர் விளையாடிய இலங்கை அணி இரண்டு இன்னிங்சிலும் 244, 324 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதையடுத்து நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணியினர் அதர்வா டைட் (177), பவன் ஷா (282) வதேரா (64) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 8 விக்கெட் இழப்பிற்கு 613 ரன்கள் குவித்தநிலையில் டிக்ளேர் செய்தனர். அதன் பின்னர் விளையாடிய இலங்கை 316 ரன்னில் ஆல் அவுட் ஆக, பாலோ-ஆன் ஆனது இலங்கை.
அதையடுத்து, 297 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் 2ஆவது இன்னிங்க்ஸினைத் தொடங்கிய இலங்கை 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியது.
