உக்ரைனுடன் ரஷ்யா நடத்திவரும் போரில், அவ்வப்போது உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இதனால் ரஷ்ய அரசு கடந்த ஜூன் மாதத்திலேயே, தங்கள் நாட்டுக்கு எதிராக அவதூறு செய்திகள் பரப்புவதாக, ‘Fake News Law’ எனும் சட்டத்தை பயன்படுத்தி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்குத் தடைவிதித்தது.
மேலும், உக்ரைனில் உள்ள சமூக ஊடகப் பயனர்கள் ரஷ்யர்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் கருத்துக்களை அனுமதிப்பதாகவும்,
மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான மெட்டா நிறுவனம் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் மாஸ்கோ நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

மெட்டா நிறுவனம் சார்பாக தடையை எதிர்த்து மாஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் மெட்டா நிறுவனத்திற்கு தடை விதித்தது.
இந்நிலையில் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து ரஷ்ய அரசு இன்று (அக்டோபர் 11) உத்தரவிட்டுள்ளது.

மாஸ்கோ நீதிமன்றத்தின் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த மெட்டா தரப்பு வழக்கறிஞர்,
’இந்த அமைப்பு ஒருபோதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடவில்லை. மேலும் இந்த அமைப்பு, ரஷ்யாமீது தீவிரமான மற்றும் பகுத்தறிவற்ற வெறுப்பு எனக் கூறப்படும் ரஸ்ஸோபோபியாவுக்கு எதிரானது மட்டுமே” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
