ஜி-20 மாநாடு தீர்மானத்துக்கு இடையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!

Published On:

| By Monisha

russia drone attack on ukraine on midnight

உக்ரைன் போர் பற்றிய ஜி-20 மாநாட்டு தீர்மானம் பைடனின் முயற்சிக்கு ஒரு பெரிய முன்னெடுப்பாக இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ள நிலையில் உக்ரைன் தலைநகரில் இரவு நேரத்தில் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

ஜி-20 உச்சி மாநாட்டில் உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான ஐ.நா-வின் பல்வேறு தீர்மானங்களுக்கு பெருமளவிலான உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.

இதேபோன்று, ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதில் படைகளைப் பயன்படுத்துவதில் இருந்து ரஷ்யா விலகி இருக்க வேண்டும் என்ற ஐ.நா-வின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப டெல்லியில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் படையெடுப்பு குறித்த ஜி-20 மாநாட்டு தீர்மானம், பைடனின் முயற்சிக்கு ஒரு பெரிய முன்னெடுப்பாக இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளன. நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் காரணமாக வானில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு புகை மண்டலம் சூழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கீவ் நகரின் மீது சுமார் ஐந்து முறை குண்டுகள் வீசப்பட்டதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யப் படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கீவ் நகர மேயர் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த புதன்கிழமை கோஸ்டியாண்டினிவ்கா என்ற பகுதியில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

தூய்மைப் பணியாளர்களின் மாத சம்பளத்தை முறைப்படுத்த கோரிக்கை!

வேலைவாய்ப்பு : மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share