உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்: 40,000 டன் தானியங்கள் சேதம்!

Published On:

| By Selvam

Russia attack on Ukraine port

‘ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும்’ என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் – ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை ரஷ்யா, டிரோன்கள் மூலம் தாக்கியதில் 40,000 டன் தானியங்கள் சேதமாகியிருக்கின்றன.

ரஷ்ய – உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது.

உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உட்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த போர் காரணமாக தானிய ஏற்றுமதி நின்று மிகப் பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

இதைத் தவிர்க்க கடந்த வருடம் ஜூலை மாதம் ஐ.நா மற்றும் துருக்கி தலையிட்டு ரஷ்யாவுடன் ஓர் உடன்படிக்கை செய்தது.

கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷ்யா சம்மதித்தது.

இந்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் இதை மீண்டும் புதுப்பிக்க ரஷ்யா மறுத்து, இதிலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதனால், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து பல்லாயிரக்கணக்கான டன் தானிய ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் உருவாகி அதன் மூலம் பெரும் உணவு பஞ்சம் ஏற்படலாம் என அச்சம் உருவானது.

ஆனால், ‘ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும்’ என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்திருந்த நிலையில்,

உக்ரைன் துறைமுகம் ஒன்றை ரஷ்யா, டிரோன்கள் மூலம் தாக்கியதில் 40,000 டன் தானியங்கள் சேதமாகியிருக்கின்றன.

இந்தத் தாக்குதல் குறித்து பேசியுள்ள உக்ரைன் துணை பிரதமர் ஒலெக்ஸாண்டர் குப்ரகோவ்,

“உக்ரைன் – ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை ரஷ்யா டிரோன்கள் மூலம் தாக்கியதில் 40,000 டன் தானியங்கள் சேதமாகியிருக்கின்றன.

டானுபே துறைமுகத்தின் கட்டமைப்பு பெருமளவில் சேதமடைந்திருக்கிறது. உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு ஈடாக வேறு ஒரு நாடு ஏற்றுமதி செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அதிகாரிகளின் தகவல்படி உக்ரைனில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்ய படையெடுப்பில் இருந்து 499 குழந்தைகள் உட்பட 10,749 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 15,599 பேர் காயமடைந்துள்ளனர்.

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் விடுவிக்கப்பட்டவுடன் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை நடைபயணம்… எடப்பாடி போட்ட தடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share