நாங்குநேரியில் நடப்பது என்ன? மனம் திறக்கும் முன்னாள் பள்ளி முதல்வர்!

Published On:

| By christopher

rtd school principal open up about nanguneri issue

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் மாணவன் சின்னதுரை (17) மற்றும் அவரது தங்கை சந்திரா செல்வி (13) இருவரும், சக பள்ளி மாணவர்களால் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு 10 மணியளவில் கொடூரமாக வெட்டப்பட்டனர். தற்போது படுகாயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அந்த நாங்குநேரியைச் சேர்ந்த  ஓய்வு பெற்ற பள்ளிமுதல்வர் இந்திரா தேவி இச்சம்பவம் குறித்து மின்னம்பலத்திற்கு இன்று (ஆகஸ்ட் 12) பேட்டியளித்துள்ளார்.

இது காலங்காலமா நடந்துட்டு இருக்கு!

அவர், “மாணவன் சின்னதுரைக்கு வந்து மிரட்டல்கள்.. தனிப்பட்ட முறையான துன்புறுத்தல்னு தொடர்ந்து நடந்துட்டு இருந்துருக்கு. இந்த பிரச்சன இன்னைக்கு நேத்து நடந்தது கிடையாது. இது காலங்காலமா நடந்துட்டு இருக்கு. ஆனா யாரும் இத பத்தி பேசல. வெளிய பேசுனா பெரிய பிரச்சனையாகும்னு அப்படியே மனசுல போட்டு இந்த காலம் வரைக்கும் அடிமையாகவே இருந்துட்டாங்க.

எங்க ஊருல எங்க சமுதாயத்த சேர்ந்த மக்கள் எல்லோருமே காலி பண்ணிட்டு போயிட்டாங்க. எங்க தெரு மட்டும் தான் பாக்கி.

சென்னைக்கு ரயிலேற முயன்ற சின்னதுரை

இந்த பையன் சின்னதுரை கடந்த 10 நாளா ஸ்கூலுக்கு போகல. அவன் பயந்துக்குட்டு பெத்தவங்க கிட்டயும் சொல்லல. ஸ்கூலுலயும் சொல்லல.

ஒரு கட்டத்துல அவன் அந்த பசங்களோட துன்புறுத்தலுக்கு பயந்து சின்னதுரை யாருக்கிட்டயும் சொல்லாம, சென்னை போறதுக்கு ரயில்வே ஸ்டேசன் வர போயிருக்கான். அவங்க உறவினர் ஒருத்தர் தான் தைரியம் கொடுத்து மீதி இருக்குற ஆறு மாசமும் பிளஸ்2 படிச்சி முடிச்சிட்டனா, வெளியூர் போயி மேற்படிப்பு படிக்காலம்னு சொல்லி அங்கேருந்து கூட்டு வந்துருக்காரு.

அடுத்த நாள், ஸ்கூல் டீச்சர்ஸ்ட்ட பேசி, பையனோட அம்மாதான் அங்க விட்டுட்டு வந்துருக்காங்க. இத தெரிஞ்சிக்கிட்ட அந்த பசங்க.. சாயாங்காலம் சின்னதுரை வீட்டுக்கு வந்ததும், “நீ எப்படி எங்கள பத்தி ஸ்கூலுல சொல்லுவ?” ன்னு கேட்டுருக்காங்க. சின்னதுரை அதுக்கு வாயே தொறக்கல. அமைதியா இருந்துருக்கான்.

கொஞ்சம் நேர கழிச்சி சம்பந்தட்ட பசங்களோட பாட்டியும், அண்ணனும் வீட்டுக்கு வந்து “எதுன்னாலும் எங்க கிட்ட சொல்லிட்டு போயிருக்க வேண்டியது தானேன்னு’ சத்தம்போட்டுருக்காங்க.

அன்னைக்கு நைட்டு 9.30 மணிக்கிட்ட சின்னதுரையும், அவன் தங்கச்சியும் சாப்பிட்ட உட்காந்துருக்காங்க. அப்போ அவங்க வீட்டுக்கு வந்த அந்த 3 பசங்களும், சரமாரியா தலை, கழுத்து தொடைன்னு வெட்டிருக்காங்க. கைய வச்சி தடுக்க பாத்ததுல… பையனோட கையில பலமா வெட்டு விழுந்துருக்கு.

மனுஷன் உடம்புல 5 லிட்டர் ரத்தம் இருக்கும்னா, அவன ஹாஸ்பிட்டல்ல கொண்டு வரதுக்குள்ள 3 லிட்டர் ரத்தம் போயிருக்கும். இப்போ அவன் உசுரோட இருக்குறதே அதிசயம் தான்.

rtd school principal open up about nanguneri issue

எங்க குழந்தைங்க படிக்கவே கூடாதா?

ஊருக்கு நடுவுல இருக்குற வீட்டுல… ஸ்கூலுக்கு போற 17 வயசு குழந்தைக்கு இந்த நிலைமைன்னா… என்ன சொல்றதுன்னே தெரியல.

அதே நேரத்துல இந்த சம்பவம் நடக்கலனா, யாரும் இத பத்தி பேசியிருக்க மாட்டோம். இவ்ளோ மீடியா வந்துருக்காது. வெளி உலகுக்கும் தெரிஞ்சிருக்காது.

எத்தனையோ கிராமம் அழிஞ்சாமாறி, எங்க கிராமமும் அழிஞ்சிருக்கும். நாங்க பேசுறது எதிர்கால சந்ததிக்காக தான். மனுஷனோட வாழ்க்கைக்கு ஆதாரமே படிப்பு மட்டும் தான். அந்த நல்லா படிக்கிற பையன ஒழுக்கமான குழந்தைய வளர்த்தது எங்க தப்பா? இல்ல படிக்கவே கூடாதா? சுதந்திரம் வாங்கிட்டோம்னு சொல்றாங்க… அது இந்த குழந்தைங்களுக்கு எப்போ கிடைக்கும்?

அவங்கள தாண்டி தான் நாங்க பஸ் ஸ்டாண்டுக்கு, ஹாஸ்பிட்டலுக்கு போகனும். இப்படி இருக்கும் போது ஒவ்வொரு தடவையும் உசுற கையில புடிச்சிட்டு, வாயில பூட்டு போட்டுட்டு ஒரு சமுதாயம் வாழ முடியுமா? எங்க ஊரு வாழவே தகுதியில்லாத ஊரா மாறியிருக்கு.

எங்க சமுதாய மக்களுக்கு ஏக்கர் கணக்குல நிலம் இருந்தது. ஆனா தண்ணி கிடைக்காது. இப்போ எங்க சமுதாய மக்கள் யாருட்டயும் விவசாய நிலமே இல்ல. எல்லோரும் கூலி வேலைக்கு போய்கிட்டு இருக்காங்க.

rtd school principal open up about nanguneri issue

கண்டிப்பா நீதி கிடச்சாகனும்!

அதனால் அரசு எங்களுக்கு ஒரு G.O கொண்டு வந்தால் கூட சந்தோசம் தான். எங்க சமுதாயத்த மட்டுமல்ல, அவங்க சமுதாயத்தையும் அவர்கள் பாழ்படுத்தி கொண்டு இருக்காங்க.

நான் அந்த சமுதாய மாணவர்களுக்கும் 25 வருடம் வகுப்புகளில் பாடம் எடுத்துள்ளேன்.  நான் அவர்களுடைய குழந்தைகளுக்காகவும் தான் பேசுகிறேன். இப்போ அந்த 6 குழந்தைகளோட எதிர்காலமும் என்னாச்சி? இன்னும் எத்தனையோ குழந்தைகள் இந்த வெறிபிடித்த, வெறுப்பு மனநிலையோட இருக்காங்க.

சினிமாவில் அத்திப்பட்டி என்ற கிராமம் அழிந்த்தை பத்தி எல்லோரும் பேசுவாங்க. ஆனா எங்க ஊரு பக்கத்துல இந்த சாதி கொடுமைகளை தாங்க முடியாம 6 கிராமங்கள் காணாமயே போயிடுச்சி… இதெல்லாம் யாருக்கும் தெரியாது.

சின்னதுரையோட வீட்டுல படி நிறைய சிந்திக்கிடக்குற ரத்தத்த பாத்த யாரா இருந்தாலும் அவங்களுக்கு மனசு கொதிக்கும். இந்த சம்பவத்துக்கு கண்டிப்பா நீதி கிடச்சாகனும்.” என்று இந்திரா தேவி பேசியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

நீ எஸ்.சி தானே… அம்மாவ ஏசினாங்க… அண்ணன வெட்டினாங்க’ -நடந்ததைச் சொல்லும் தங்கை சந்திராசெல்வி

நீட் தேர்வுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏன்? – மாணவியின் பெற்றோர் ஆதங்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share