எடப்பாடியின் ஊழல் அத்தியாயங்கள்: ஸ்டாலின்

Published On:

| By Balaji

ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தது ஆந்திரா காவல் துறையா என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தோரை இழிவுபடுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று கைது செய்யப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே அவரை இடைக்கால ஜாமீனில் நீதிமன்றம் விடுவித்தது. அரசுக்கு எதிராக ஊழல் புகார்களை அளித்து வந்ததால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார் என ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

ADVERTISEMENT

தனக்கும் ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் ஆதாயத்திற்காக அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்வதாக ஸ்டாலின் மீது குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, சேலம் மாவட்டத்திற்கு மட்டுமே முதலமைச்சராக இருப்பவரைப் போலச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். சென்னையில் ஏதாவது ஆய்வு செய்வார், அதைவிட்டால் சேலத்தில் ஆய்வு செய்வார்.உருப்படியான செயல்திட்டம் இன்றி, ஆய்வு செய்வதால் மட்டுமே கரோனா அகன்று ஓடிவிடும் என்று மனப்பால் குடிக்கிறார்” என்று கூறியுள்ளார். .

ADVERTISEMENT

100 நாட்களுக்கு முன்னால் பேசிய ஒன்றை எடுத்துக் கொண்டு ஆர்.எஸ்.பாரதியை அவசரம் அவசரமாகக் கைது செய்கிறார்கள் என்றால், என்ன காரணம், நேற்றுத்தான் இந்த அரசாங்கத்தின் 200 கோடி மதிப்பிலான ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, அதன்மீது நடவடிக்கை தேவை என்று தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் விளக்கமாகப் புகார் செய்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி. ஆகவே பழிவாங்கும் நோக்கில், உடனே அவரது வீட்டுக்குப் போலீசை அனுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சித்த ஸ்டாலின்.

“ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். அப்படியானால் அவரைக் கைது செய்தது ஆந்திர காவல்துறையா? கைது செய்திருப்பது தமிழகக் காவல்துறை என்றால், அரசுக்குச் சம்பந்தம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?” என்றும் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

பழங்குடிச் சிறுவனைச் செருப்பு தூக்கச் சொன்ன அமைச்சரைக் கண்டிக்க முடியாத, பெண் நிருபர்களைக் கொச்சைப்படுத்திய சிரிப்பு நடிகரைக் கைது செய்ய முடியாத, உயர்நீதிமன்றத்தையும், காவல் துறையையும் நா கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்து அவதூறு செய்தவரைப் பிடிக்க முடியாத, முதல்வர், பட்டியலின மக்களைக் காக்கத் தோள் தட்டிப் புறப்பட்டுள்ளதாக, பகல் வேடம் போடுவது வேடிக்கையானது; வினோதமானது என்று சாடிய அவர், “

எடப்பாடி பழனிசாமி, தமது வீட்டுக்கு எதிரே குடியிருந்த காவலர் பழனிசாமி குடும்பத்தை, சாதிவெறி கொண்டு என்ன பாடு படுத்தினார் என்ற கதைகளை முதல்வர் மறந்திருக்கலாம். நாடு மறக்கவில்லை.திசை திருப்பும் தீய நோக்கத்துடன், கபட நாடகங்கள் எத்தனை நடத்தினாலும்; மக்கள் மன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் அடுக்கடுக்கான ஊழல் அத்தியாயங்களை அம்பலப்படுத்துவதற்கு, திமுக எப்போதும் தயங்காது; தயாராகவே இருக்கும்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

**எழில்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share