திமுக ஆட்சிக்கு வந்த 33 மாதங்களில் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரியில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதைதொடர்ந்து ஜனவரி 27ல் ஸ்பெயின் சென்ற முதல்வர் பல்வேறு நிறுவனங்களுடன் கையெழுத்திட்டு முதலீடுகளை ஈர்த்து வந்தார்.
வெள்ளை அறிக்கை கேட்ட எடப்பாடி
இந்நிலையில், “ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில் ஐக்கிய அரேபிய நாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா; பிறகு சிங்கப்பூர் சுற்றுப் பயணம்; 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு; பிறகு ஜனவரி 27-ல் ஸ்பெயினுக்கு சுற்றுப் பயணம் என்று தமிழ் நாட்டில் அந்நிய தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் என அயராது, உறங்காது இரவும் பகலும் உழைக்கும் முதலமைச்சரின் முயற்சிகளால், உண்மையிலேயே திமுக ஆட்சியில் 32 மாதங்களில் எவ்வளவு நேரடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன என்றும்; அதன்படி எத்தனை தொழிற்சாலைகள் செயல்படத் துவங்கியுள்ளன என்றும்; அதன்மூலம் எவ்வளவு நபர்களுக்கு (தமிழர்களுக்கு) வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும்; புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எவ்வளவு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு அரசை அணுகியுள்ளன என்றும் இந்த அரசு முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.
ரூ.8.65 இலட்சம் கோடி முதலீடு
இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் 33 மாத ஆட்சியில் பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.8.65 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் , “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.
மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன்எப்போதும் இல்லாத அளவாக, 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின்மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான்காம் கட்டமாக 27-1-2024 அன்று முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும், கிடைக்கும் திறன்வாய்ந்த மனித வளத்தையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வருமாறு அழைப்பு விடுத்தார்.
அவற்றின் பயனாக ரூ.3.440 கோடி ரூபாய் அளவிற்குத் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கியப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டு பாராட்டியது.
‘ஆண்டுவாரி முதலீட்டாளர்கள் சந்திப்பு 2022 நடைபெற்றபோது ஆசிய- ஒசியான மண்டலத்திற்கான சிறந்த முதலீட்டு நிறுவனத்திற்குரிய விருது தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
புதிய தொழில் முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்கள் செய்துள்ள நிலையில் தமிழ்நாட்டைப் பெரிய அளவில் தொழில்மயமாக்க அடுத்த 5 ஆண்டுகளில் 45,000 ஏக்கர் பரப்பளவில் நில வங்கி உருவாக்கப்படுகிறது. இதற்காக, சிப்காட் நிறுவனம் ஏறத்தாழ 33,489 ஏக்கர் நிலம் தெரிவு செய்துள்ளது. இதில், 22,941 ஏக்கர் நிலம் அரசின் நிருவாக அனுமதி பெற்று கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின். இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
இப்படித் தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்படுவதுடன். ஒப்பந்தங்கள் தொழில் நிறுவனங்களாக உருப்பெறத் தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக முதலமைச்சர் தொழில் துறை அமைச்சர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார்கள். இந்த குழுவின் தொடர் நடவடிக்கைகளின் மூலம் பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து உருவாகும் வாய்ப்பு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 33 மாத ஆட்சிக் காலத்தில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூபாய் 8.65 இலட்சம் கோடி முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அதன் மூலம் ஏறத்தாழ 30 இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அச்சாரம் போட்ட கலைஞர்… அப்டேட் செய்யும் ஸ்டாலின்… தொடங்கியது கணித் தமிழ் மாநாடு!