மானசரோவர் ஆன்மிகப் பயணம் செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.50,000 ஆக உயர்த்தப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று (ஏப்ரல் 19) பேசிய அவர், “தமிழகத்தில் 745 கோயில்களில் ரூ.331 கோடியில் திருப்பணிகள் நடைபெறும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்படும்.
திருச்சி ஜம்புகேசுவரர் ஆலயம், அகிலாண்டேஸ்வரி ஆலயம் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் ஆலயங்களில் மகா சிவராத்திரி பெருவிழா கொண்டாடப்படும்.
மானசரோவர் புனிதத்தலத்துக்கு முதன்முறையாக ஆன்மிகப் பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரூ.40,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்படும்.
அதேபோல் முக்திநாத் புனிதத்தலத்துக்கு முதன்முறையாக ஆன்மிகப் பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் ரூ.10,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்” என்று சேகர்பாபு அறிவித்தார்.
மேலும், “நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதி 3 கோடி ரூபாயில் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும்.
தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து வழிகாட்டி சுற்றுலாக்கள் நடத்தப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.