தமிழகத்தில் மணல் குவாரி முறைகேட்டில் சுமார் ரூ.4,600 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ள அமலாக்கத்துறை, அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வருமான வரித்துறைக்கும் ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்ட விரோதமாக விற்பனை செய்வதாகவும், அதன் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன.
அதனையடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகள், மணல் விற்பனை செய்யும் இடங்கள், ஒப்பந்ததாரர்கள் அலுவலகம், அவர்களது குடியிருப்பு வளாகங்கள் மற்றும் தனியார் நபர்கள் உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தியது.
மேலும் ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது பினாமி பெயரில் மணல் அள்ளியதும், போலியான மணல் விற்பனை ரசீதுகள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி வரி இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதையும் அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
மேலும் ஐ.ஐ.டி – கான்பூரின் நிபுணத்துவத்துடன் அனைத்து மணல் குவாரி இடங்களிலும் ட்ரோன்கள், ஒளி கண்டறிதல் மற்றும் ரேங்கிங் (LiDAR) கணக்கெடுப்பு, பாத்திமெட்ரிக் பகுப்பாய்வு மற்றும் செயற்கைக்கோள் பட செயலாக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி விசாரணை அதிகாரிகள் தொழில்நுட்ப ஆய்வு நடத்தினார்கள்.
அதில், மணல் குவாரி தோண்டும் இடங்களிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் அதிகளவு தோண்டப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.
மேலும் மணல் விற்பனையானது ரூ. 4,730 கோடிக்கு நடைபெற்றுள்ள நிலையில், கணக்கிற்காக காட்டப்பட்டுள்ள வருவாய் ரூ. 36.45 கோடி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாக என அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.
இந்த நிலையில் வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி கவுன்சில் ஆகிய இரண்டிற்கும் அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
அதில், மணல் அள்ளும் பெரிய இயந்திர உற்பத்தியாளர்களான எம். கோபெல்கோ கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் இந்தியா (பி) லிமிடெட் மற்றும் எம்/எஸ். ஜே.சி.பி இந்தியா லிமிடெட் நிறுவனம், தமிழகத்தில் உள்ள 16 வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 273 மணல் அள்ளும் இயந்திரங்களை வழங்கியுள்ளது.
ஒவ்வொரு மணல் அள்ளும் இயந்திரங்களைப் பொறுத்தமட்டில் வேலை நேரம் மற்றும் செயலற்ற நேரம் பற்றிய தரவுகளின் விவரங்களையும், தோராயமாக தோண்டப்பட்ட மொத்த மணலின் அளவையும் அவர்கள் அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது நடக்கிறது என்பது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதை மீறி அளவுக்கு அதிகமாக ஒப்பந்ததாரர்கள் மற்றும் மணல் அள்ளும் இயந்திரங்களின் உரிமையாளர்கள் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோத மணல் குவாரிகள் மூலம் கிடைத்த மொத்த வருவாயையும் மறைத்து, கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்” என அமலாக்கத்துறை அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இந்தியன் 2 டிரைலர் : அரைத்த மாவை நவீன ஆட்டுக் கல்லில் அரைத்திருக்கிறாரா ஷங்கர்?