நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியரிடம் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நடந்த மக்களவை தேர்தலையொட்டி பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த 6-ந்தேதி அன்று சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதான சதீஷ் தமிழக பா.ஜனதா துணைத்தலைவரும், நெல்லை தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி வருகிறார் என்பது தெரியவந்தது.
மேலும் தாங்கள் கொண்டு சென்ற பணம் நயினார் நாகேந்திரன் உடையது என்றும் மூவரும் வாக்குமூலம் அளித்தனர். அதனடிப்படையில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நயினார் நாகேந்திரனுக்கு இருமுறை சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து மே 2ஆம் தேதி ஆஜராக உள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தாம்பரம் போலீசாரிடம் இருந்து வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கடந்த 26ஆம் தேதி உத்தரவிட்டார்.
அதன்படி தங்கள் வசம் உள்ள இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் தாம்பரம் போலீசார் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், தற்போது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நடிகை ராதா மீது மீண்டும் போலீசில் புகார்!