கோவை மாவட்டம் எட்டிமடை அருகே வாகன சோதனையில் 22 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட அந்த பணத்தை போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சேலம் கொஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக நகை, பணம் கொள்ளை, ஹவாலா பண கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக கேரள எல்லைப்பகுதிகளில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் நோக்கில் கடந்த மாதம் எட்டிமடை பகுதியில் புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவையிலிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். கேரள பதிவு எண் கொண்ட அந்த வாகனத்தில் 22 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் தாமதாஸ் மற்றும் அவிராஜ் என்பதும் தெரிய வந்தது.
ராமதாஸ் பாலக்காட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. எனினும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அதனை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
