புதுச்சேரியில் கொம்யூன் பஞ்சாயத் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து சோதனை மேற்கொண்டது.
புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் (ஊராட்சி மன்றம் கிளார்க்) பஞ்சாயத் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக ரவிக்குமார் பணி செய்து வருகிறார்.
2015-ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சேர்ந்த ரவிக்குமார் 2017ல் நிரந்தரம் செய்யப்பட்டார்.
இவர், 01.04.2017 முதல் 31.03.2023 காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சிபிஐக்கு புகார் சென்றது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ரவிக்குமாருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், அக்டோபர் 15ஆம் தேதி மீண்டும் ரவிக்குமாருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்தனர்.
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள ரவிக்குமார் வீடு அவரது மனைவி பிரியதர்ஷினியின் மோகித் கட்டுமான அலுவலகங்களில் சோதனையிட்டனர்.
இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 20) பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவருமான நாராயணசாமி,
“60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கக் கூடிய சாதாரண கொம்யூன் பஞ்சாயத் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ரவிக்குமார் 106 கோடிக்கு மனைவி மற்றும் மாமியார் பெயரில் சொத்துக்கள் வாங்கியுள்ளார் என்பதை சிபிஐ கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆனால், இதுவரையில் அவரை கைது செய்யவில்லை. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும், அந்த ஆபரேட்டரான ரவிக்குமாரை சஸ்பெண்ட் செய்யவில்லை.
சிபிஐ வழக்கிலிருந்து ரவிக்குமாரை காப்பாற்ற ஒரு அமைச்சர் சென்னையிலியே இருந்து வருகிறார் ” என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை குறிப்பிட்டு பேசினார்.
முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டுகள் பற்றி நாம் சிபிஐ தரப்பில் விசாரித்தோம்.
“ரவிக்குமார் அவரது மனைவி பிரியதர்ஷினி மற்றும் மாமியார் குமுதம் பெயரில் சொத்துக்கள் வாங்கியுள்ளார்.

2017 முதல் 2023 வரை ரவிக்குமார், அவரது மனைவி பிரியதர்ஷினி உள்ளிட்ட குடும்பத்தினரின் வருமானம் 1 கோடியே 63 லட்சத்து 69 ஆயிரத்து 548 ரூபாய்.
ஆனால், அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 74 லட்சத்து 70 ஆயிரத்து 497 ரூபாய் சேர்த்துள்ளனர். அதாவது 106.73% கணக்கில் வராத வருமானமாக உள்ளது.
முன்னாள் முதல்வர் நாரயணசாமி இந்த 106.73% சதவீத கூடுதலான வருமானத்தைதான் 106 கோடி என்று சொல்லி பரப்பரப்பை ஏற்படுத்திவிட்டார்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
ஏர் இந்தியாவில் சீக்கியர்கள் பயணிக்க வேண்டாம்- காலிஸ்தான் தீவிரவாதி கோரிக்கை வைத்த பின்னணி!
கூப்பிட்டாலும், கூப்பிடாவிட்டாலும் விஜய் மாநாட்டுக்கு போவேன்- நடிகர் விஷால்
