550 திரையரங்குகளில் ‘ஆர்ஆர்ஆர்’!

Published On:

| By admin

மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே டிவிவி தானய்யா தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தை நாளை (மார்ச் 25-) தமிழ்நாட்டில் 550 அரங்குகளில் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது.

தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. பிரமாண்ட படங்கள் மூலம் தனக்கென தனியிடம் பிடித்துள்ள லைக்கா, இத்திரைப்படத்தையும் தனக்கே உரிய பாணியில் மிகப்பெரிய முறையில் வெளியிடுகிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் மட்டும் இப்படம் 550 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மொழி பெயர்க்கப்பட்ட ஒரு படத்தை இத்தனை திரையரங்குகளில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இது இயக்குநர் ராஜமௌலியின் முந்தைய வெளியீடான பாகுபலியை விட 150 திரையரங்குகள் அதிகமாகும்.

படத்தில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார். ஜூனியர் என்டிஆர் கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

ADVERTISEMENT

இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே ‘ஆர்ஆர்ஆர் ‘ படத்தின் மையக்கரு என்று இயக்குநர் ராஜமௌலி கூறியுள்ளார்.

ராம் சரணின் காதலி சீதாவாக ஆலியா பட் நடித்துள்ளார். இதை தவிர ஒளிவியா மோரிஸ், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share