திண்டுக்கலில் இன்று (அக்டோபர் 4) அதிகாலை போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்த பிரபல ரவுடி ரிச்சர்ட் சச்சினை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் 28ஆம் தேதி முகமது இர்பான் என்பவரை மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது.
இந்த வழக்கில் கைதான ரவுடி ரிச்சர்ட் சச்சினை திண்டுக்கல் போலீஸார், அவர் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் மாலைப்பட்டி சுடுகாடு பகுதிக்கு விசாரணைக்காக இன்று அதிகாலை அழைத்துச் சென்றனர்.
அப்போது அவர் காவலர் அருணை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாகவும், இதையடுத்து தற்காப்புக்காக காவல்துறை அதிகாரிகள் அவர் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்த ரவுடி சச்சின் மற்றும் காவலர் இருவரும் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடரும் துப்பாக்கிச் சூடு!
தமிழ்நாட்டில் ரவுடிகளை போலீசார் என்கவுண்ட்டர் செய்வதும், சுட்டுப்பிடிக்கும் சம்பவங்களும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
திருச்சியில் கடந்த ஜுலை மாதம் ரவுடி கலைப்புலி ராஜாவையும், கடந்த மாதம் ரவுடி ஜம்புகேஸ்வரனையும் போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம், ரவுடி காக்காதோப்பு பாலாஜி, ரவுடி சீசிங் ராஜா, கேரளாவில் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடித்து விட்டு கண்டெய்னர் லாரியில் தப்ப முயன்ற கொள்ளையன் ஆகியோரை தமிழக போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவங்களை தொடர்ந்து, இன்று திண்டுக்கல்லில் ரவுடி சச்சினை சுட்டுப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா