மதுரையில் நேற்று (மார்ச் 22) நள்ளிரவில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், 2 தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். rowdy kaleeswaran murder at midnight
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன். (வயது 32) இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல அப்பகுதியில் பலருடன் காளீஸ்வரனுக்கு முன்பகையும் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் நேற்று நள்ளிரவில் இருந்த காளீஸ்வரனை, இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் காளீஸ்வரன்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வீ.கே. குருசாமியின் உறவினர் தான் காளீஸ்வரன். அவரது எதிரியான வெள்ளைகாளிதான் சிறையில் இருந்தபடியே தனது ஆட்கள் மூலம் காளியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும் காளீஸ்வரன் உறவினர்களும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அசாம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க மதுரை ராஜாஜி மருத்துவமனை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நாள்தோறும் கொலைகள் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், நள்ளிரவில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.