புதுக்கோட்டை அருகே ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
திருச்சி எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் துரை என்கிற துரைசாமி.
புதுக்கோட்டையை சேர்ந்த இளவரசன் கொலை உள்பட 5 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.
2023-ல் திருச்சியில் திருட்டு வழக்கிற்காக விசாரணைக்கு அழைத்துசென்றபோது தப்பி சென்றவர் ரவுடி துரை.
இவரை கைது செய்வதற்காக திருச்சி போலீசார் தேடி வந்த நிலையில், புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் வம்பன் யூக்கலிப்டஸ் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் உள்ளிட்ட போலீசார் அந்த காட்டு பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். போலீசார் ரவுடி துரையை நெருங்கிய போது அவர் போலீசாரை தாக்கியிருக்கிறார்.
ஆலங்குடி உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை துரை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரவுடி துரையை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கால் மற்றும் நெஞ்சு பகுதியில் குண்டு பாய்ந்ததில் ரவுடி துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தஆலங்குடி உதவி ஆய்வாளர் மகாலிங்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரவுடி துரை என்கவுன்டர் செய்யப்பட்டிருப்பது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்காப்பிற்காக அவரை சுட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
– பிரியா
